Sunday, January 20, 2008

ருத்ராக்ஷம் - ஓர் அறிமுகம்

எம்மதஸ்தர்களும் ஜபம் செய்வதற்கு ஏதாவது ஒருவகை ஜபமாலையை உபயோகிக்கிறார்கள். ஹிந்துக்கள் ருத்ராக்ஷத்தையோ, துளஸியையோ, ஸ்படிகத்தையோ பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள்.
'ருத்ராக்ஷ' என்ற சொல்லுக்கு ருத்ரனின் கண்ணீர் என்று பொருள்படும். ருத்ராக்ஷம் என்பது அதே பெயர் கொண்ட மரத்தின் காய் தான். இது நேபாள தேச மலைகளிலும், ஜாவா தீவிலும் அதிகமாக காணப்படுகிறது. இதில் போலிகளும் கிடைக்கின்றன. ருத்ராக்ஷம் மிக புனிதத்தன்மை பெற்றது. ருத்ராக்ஷமும், ஸ்படிகமும் சிவ பக்தர்களாலும், துளஸி வைணவர்களாலும் பெரும்பாலும் அணியப்ப்டுகிறது.

பத்ம புராணம் கூறவது:

"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராகஷத்தை தரிப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்".

ருத்ராக்ஷத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:

க்ருத யுகத்தில் த்ருபுரன் என்ற அசுரன் ப்ரம்மாவிடமிருந்து அநேக வரங்களைப் பெற்று, ப்ராம்மணர்களையும், தேவர்களையும் வெகுவாக இம்சித்து வந்தான். ருத்ரனிடம் முனிவர்களும், தேவர்களும் முறையிட அவர் இவ்வசுரனை சம்ஹரித்தார். இந்த சண்டையில் ருத்ரனது வியர்வைத் துளிகள் பூமியில் விழ, அவை ருத்ராக்ஷ மரங்களாக உண்டாயின.

பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும். ருத்ராக்ஷம் அதனுடைய முகங்களைக் கொண்டு பலவகையாக அறியப்படுகிறது.

(1) ஒரு முக ருத்ராக்ஷம் 'சிவ' என்று அறியப் பெறும். இதை அணிவதால் ப்ரம்மஹத்தி தோஷமும் விலகும். மோக்ஷம் விரும்புவோர் இதை அணிய வேண்டும்.
(2) இரு முக ருத்ராக்ஷம் 'தேவ தேவ' என்று அறியப் பெறும். இது 'அர்த்தநாரீஸ்வரனைக்' குறிக்கும். இது சகல பாபங்களையும் போக்க வல்லது. முக்யமாக பசுஹத்தி தோஷத்தை நிவர்த்திக்கும். ஸ்வர்கப் ப்ரதமமானது.
(3) மூன்று முக ருத்ராக்ஷம் 'அனல' என்று அறியப் பெறும். இது அக்னி தேவனைக் குறிக்கும். இது சஞ்சித பாபங்களை (accumulated sins) போக்கி, சர்வ யஞ்ஞ பலன்களைக் கொடுக்கும். இதை அணிபவர் தைரியமிக்கவர்களாயும், சத்ருக்களால் வெல்ல முடியாதவராயும் ஆவர். அதி நுட்பமான புத்தி உண்டாகும். வயற்று உபாதை உண்டாகாது. தீயினால் பாதை ஏற்படாது. அமங்களங்கள் ஏற்படாது. முடிவில் ஸ்வர்கம் அடைவர்.
(4) நான்கு முக ருத்ராக்ஷம் 'ப்ரும்மா' என்று அறியப் பெறும். இதை அணிபவர் வேத விற்பன்னர்களாயும், தர்ம சாஸ்திர நிபுணர்களாயும், தனவந்தர்களாயும் ஆவதோடு, கொலை செய்த பாபங்களும் அகலப் பெறுவர்.
(5) பஞ்ச முக ருத்ராக்ஷம் 'காலாக்னி' என்று அறியப் பெறும். இது பரமசிவனது ஐந்து முகங்களாகிய "சத்யோஜாதம், வாமதேவ, அகோரம், தத்புருஷம், ஈசான:" என்பனவற்றைக் குறிக்கும். இதை அணிபவர் நிஷேத ஆகாரம் செய்த பாபத்திலிருந்து விடுபடுவர், சிவனுக்கு மிகவும் அடியார்களாவர், ஐஸ்வர்யவானாயும், சந்தோஷமுள்ளவனாயும், இம்மையிலும், மறுமையிலும் சகல போகங்களையும் பெற்று, தேவர்களாலும் வணங்கப் பெறுவர். எல்லா விதங்களிலும் பஞ்சமுக ருத்ராக்ஷம் விசேஷமாக கருதப்படுகிறது.
(6) ஆறுமுக ருத்ராக்ஷம் 'கார்திகேய' என்று அறியப் பெறும். இதை வலது கையில் அணிவதால் ப்ரும்மஹத்தியாதி பாபங்கள் நீங்கும். மிக பராக்ரமசாலியாயும், தோல்வியறியாதவனாயும், சகல நற்பண்புள்ளவனாயும், யௌவனமும், அழகும் பெற்றிருப்பான். அன்னை பராசக்தி அருள் கிடைத்து, பெரியதொரு சதஸிலும் வாக்வன்மையோடு பேசும் திறனும் பெறுவான். மறுமையில் ஸ்வர்கம் பெறுவான்.
(7) ஏழு முக ருத்ராக்ஷம் 'அனந்த' என்று அறியப் பெறும். இது மஹா லக்ஷ்மியைக் குறிக்கும். ஸர்ப்ப ராஜனுக்கு பயத்தைக் கொடுக்கும் இதை அணிபவர்களை சகல விஷங்களினின்றும் காப்பாற்றும். ப்ரும்மஹத்தி, குடி, களவு, கற்பின்மை முதலியனவற்றைப் போக்கும். மூவலக சுகங்களும் ப்ராப்திற்க்கும்.
(8) எட்டு முக ருத்ராக்ஷம் 'வினாயக' என்று அறியப் பெறும். இது விநாயகப் பெருமானைக் குறிக்கும். இதை அணிபவர் எப்பிறவியிலும் மேதா விலாசத்தோடு விளங்குவர். வாழ்வில் தோல்வியின்றி, பெரிய எழுத்தாளனாகவும், சைத்ரீகனாகவும், நிர்வாகத்திறமை பெற்றவனாகவும், நீண்ட ஆயுள் வாழ்ந்து ஸ்வர்க்கப் பதவியினைப் பெறுவான்.
(9) ஒன்பது முக ருத்ராக்ஷம் 'பைரவ' என்று அறியப் பெறும். இது துர்கா (சக்தி) தேவியைக் குறிக்கும். இதை கைகளில் அணிபவர் சகல பாபங்களும் கரைக்கப்பெற்று, சிவசாயுஜ்யம் பெறுவர். இந்திரனுக்கு நிகராக வணங்கப் பெறுவர்.
(10) பத்துமுக ருத்ராக்ஷம் 'தச முக' என்று அறியப் பெறும். ருத்ராக்ஷத்தின் சக்தி மஹத்தானது. இது மஹாவிஷ்ணுவினைக் குறிக்கும். இதை கண்ட மாத்திரத்தில் சர்பங்களும் நாசமடையும். இதை அணிபர் மட்டுமின்றி அவரது சந்ததியினரும் இதனால் காக்கப் பெறுவர்.
(11) பதினோரு முக ருத்ராக்ஷத்தை சிரஸில் அணிய வேண்டும். இது அஞ்சனேயனைக் குறிக்கும். ஆயிரம் அஸ்வமேத பலனையும், ச்ரோத்ரியர்களுக்கு ஆயிரம் கோதானம் செய்த பலனையும் கொடுக்கும். மறு பிறவியற்று ஹரனுடன் ஒன்றாய் கலந்துவிடுவர்.
(12) பனிரெண்டு முக ருத்ராக்ஷம் கழுத்தில் அணிய வேண்டியது. சூரிய பகவானுக்கு திருப்தியை உண்டுபண்ணும். பல யாக, யஞ்ஞ பலன்களைக் கொடுப்பதோடு, இடி, மின்னல் முதலிய பயங்கள் ஏற்படாது. அக்னி உபாதையோ, வியாதியோ அணுகாது. ஏழ்மை ஏற்படாது. ப்ராணி வதை பாபங்கள் போகும்.
(13) பதின்மூன்று முக ருத்ராக்ஷம் 'ருத்ர' என்று அறியப் பெறும். இதை அணிபவர் சகல இஷ்டங்களையும் பெறுவர். இது க்ருஹத்திலிருந்தாலே நிதியாக விளங்கும். இது இந்திரனைக் குறிக்கும். செயற்கறிய செய்கை செய்யும் ஆற்றல் ஏற்படும். ஸ்வபந்து ஹத்தி தோஷத்தைப் போக்கி ஸ்வர்கப் ப்ரதமமாய் இருக்கும்.
(14) பதினான்கு முக ருத்ராக்ஷம் 'தேவ மணி' என்று அறியப் பெறும். சிரஸிலோ, கையிலோ அணியலாம். இது சிவ பெருமானைக் குறிக்கிறது. இதை அணிபவர் தேவர்களாலும் பூஜிக்கப் பெறுவர். இது பேய், பிசாசு இன்ன பிற தீய சக்திகளிலிருந்து காக்கும். சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும்.

ருத்ராக்ஷம் அணியும் போது அததற்குண்டான மந்திரங்களைச் சொல்லியே அணியவேண்டும்.

ஒரு முகம் -"ஓம் ருத்ர ஏகவக்த்ரஸ்ய"
இரு முகம் -"ஓம் கம் த்விவக்த்ரஸ்ய"
மூன்று முகம் -"ஓம் வம் த்ரிவக்த்ரஸ்ய""
நான்கு முகம் -" ஓம் ஹ்லீம் சதுர்வக்த்ரஸ்ய"
ஐந்து முகம் -"ஓம் ஹ்லாம் பஞ்சவக்த்ரஸ்ய"
ஆறு முகம் -"ஓம் ஹ்லூம் ஷட்வக்த்ரஸ்ய"
ஏழு முகம் - "ஓம் ஹ்ல: சப்தவக்த்ரஸ்ய"
எட்டு முகம் -"ஓம் கம் அஷ்டவக்த்ரஸ்ய"
ஒன்பது முகம் -"ஓம் ஜூம் நவவக்த்ரஸ்ய"

பத்து முகம் -"ஓம் க்ஷம் தசவக்த்ரஸ்ய"
பதினொரு முகம் -"ஓம் ஸ்ரீம் ஏகாதசவக்த்ரஸ்ய"
பனிரெண்டு முகம் -"ஓம் ஹ்ராம் த்வாதசவக்த்ரஸ்ய"
பதிமூன்று முகம் -"ஓம் க்ஷௌம் த்ரயோதசவக்த்ரஸ்ய"
பதினான்கு முகம் -"ஓம் வாம் சதுர்தசவக்த்ரஸ்ய"


தற்காலத்தில் வேறு சில மந்திரங்களும் உபயோகத்தில் உள்ளன.

ஒரு முகம் -"ஓம் நம: சிவாய ஓம் ஹ்ரீம் நம:"
இரு முகம் -"ஓம் நம: ஓம் சிவ சக்திஹி நம:"
மூன்று முகம் -"ஓம் க்லீம் நம:"
நான்கு முகம் -" ஓம் ஹ்ரீம் நம:"
ஐந்து முகம் -"ஓம் ஹ்ரீம் நம:"
ஆறு முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம:"
ஏழு முகம் - "ஓம் ஹம் நம:"
எட்டு முகம் -"ஓம் ஹம் நம: ஓம் கணேசாய நம:"
ஒன்பது முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம: ஓம் நவதுர்கையை நம:"
பத்து முகம் -"ஓம் ஹ்ரீம் நம: ஓம் ஸ்ரீ நாராயணாய நம:"
பதினொரு முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம: ஓம் ஸ்ரீருத்ராய நம:"
பனிரெண்டு முகம் -"ஓம் க்ரௌம் ஸ்ரௌம் ரௌம் நம:"
பதிமூன்று முகம் -"ஓம் ஹ்ரீம் நம:"
பதினான்கு முகம் -"ஓம் நம: ஓம் சிவாய நம:"

ருத்ராக்ஷ மாலையில் ஒழுங்கான, குற்றமற்ற ருத்ராக்ஷங்களைக் கோர்க்க வேண்டும். முகங்கள் சரியானபடியும், உடையாமலும், பூச்சி அரிக்காமலும், கோணல் மாணலிலாமலும் இருக்க வேண்டும். மாலையில் 'ப்ரும்மக்ருந்தி' என்று சொல்லப்படும் நடுநாயகமாக ஒரு தொங்கட்டம் இருக்க வேண்டும். ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.