Friday, March 14, 2008

விநாயகர் - முழு முதற் கடவுள்



விக்னேஸ்வரர் - விக்னங்களை (தடைகளை) நீக்குபவர் நமது ஹிந்து தேசத்தில் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவர். நம் புராணங்களில் விநாயகர் யானை தலையும், மனித உடலும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு தந்தம் பாதி உடைந்ததாயும், பெரிய வயிற்றை உடையவராயும், ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காலடியில் பலவகையான உணவு வகைகள் பரப்பப்பட்டிருக்கும். ஒரு சுண்டெலி(மூஞ்சூறு) உணவின் இடையில் அவரை வேண்டி அமர்ந்திருக்கும். அவரது உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது.


ஆன்மிக கல்வியின் முதல் படி 'ச்ரவணம்' எனப்பெறும் வேதாந்த உண்மைகளைக் கேட்டல். இரண்டாவது படி, 'மனனம்' எனப்பெறும் கேட்ட வேதாந்த உண்மைகளின் சுய புரிதல்/தெளிதல். விநாயகரின் பெரிய காதுகள் மற்றும் பெரிய தலை அவரது ச்ரவணம் மற்றும் மனனம் குணங்களைக் குறிக்கின்றன.


அவரது முகத்திலிருந்து வெளிப்படும் துதிக்கை அறிவையும், அறிவால் வெளிப்படும் பகுத்தறியும் (திராவிட பகுத்தறிவு அல்ல) திறனையும் குறிக்கும். மனிதனின் அறிவு நமது வேதாந்தங்களின்படி இரு வகைப்படும் - பொது (புற) அறிவு மற்றும் உள் (அக) அறிவு. உலகப் பொருட்களின் எதிர்மறை வித்தியாசத்தை உணர்த்துவது பொது பகுத்தறிவு - எ.கா., இரவு-பகல், கருப்பு-வெள்ளை, சந்தோஷம்-வருத்தம் முதலியவற்றைப் பற்றிய அறிவு. உள் பகுத்தறிவு என்பது நிலையான உண்மை-மாயை, முடிவுள்ளது-முடிவற்றது, புறஉலகம் (terrestrial) (கண்ணுக்குத் தெரிவது) -ஆன்மிகஉலகம் (Transcendental - கண்ணுக்கு தெரியாதது) போன்ற உயரிய சிந்தனைகளப் பற்றிய அறிவாகும். விநாயகரின் துதிக்கை இந்த தத்துவத்தைக் குறிக்கும். யானைகளின் துதிக்கை மற்ற எல்லா உறுப்புகளைவிட சிறப்பானது. துதிக்கையினால் தரையில் இருக்கும் ஒரு குண்டுசியையும் எடுக்கமுடியும், மற்றும் பெரிய மரத்தையும் வேரோடு எடுக்க முடியும். இதைப்போன்ற எதிர் மறை செயல்கள் புரியக்கூடிய ஒரு கருவி இருப்பதரிது. விநாயகர் பெரிய மரம் போன்ற புற உலக அறிவையும், கண்ணுக்குப் புலப்படாத சிறிய ஊசி போன்ற அக அறிவையும் ஒருங்கே உணர்ந்தரிந்தவர் என்பதையே அவரது துதிக்கை குறிக்கிறது.


மனித பூரணத்துவம் உயர்ந்த தத்துவ அறிவைப் பெறுவதனாலேயே சாத்தியம். பூரணத்துவம் பெற்ற மனிதன் உலக எதிர்மறைகளால் பாதிக்கப்படுவதில்லை. சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, குளிர்ச்சி-வெப்பம், மதிப்பு-அவமரியாதை போன்ற புற உலக எதிர்மறைகள் அவனை பாதிப்பதில்லை. சாதாரண மனிதன் உலகத்தின் இத்தகைய எதிர்மறைகளுக்கிடையே அல்லாடிக்கொண்டிருக்கிறான். இந்த விஷயத்தையே விநாயகரின் இரு தந்தங்களும் உருவகப் படுத்துகின்றன. அவற்றில் ஒன்று உடைந்திருப்பது உலக எதிர்மறைகளை உடைத்தெரியத் தயங்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்கே. புற உலகில் தந்தங்கள் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் உண்மையான அறிவு ஏற்பட இந்த உலக பொருட்களைப் பற்றிய பற்றுதலை (அதுவும் நாமே) உடைத்தெறிய வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்கே ஒரு தந்தத்தை தானே உடைத்து கையில் வைத்திருப்பதாக விநாயகர் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்.


விநாயகருடைய பெரிய பானை வயிறு குறிப்பது யாதெனில் பூரணத்துவம் பெற்ற மனிதன் எத்தகைய விஷயத்தையும், அனுபவத்தையும் உட்கொண்டு சீரணித்த பின்னும், நிலையான சிந்தனையுடன் இருக்க முடியும் என்பதையே. எத்தகைய சோதனைகளையும், பிறப்பு-இறப்பு அனுபவங்களையும் ஒருவனால் ஒரே மாதிரி சீரணிக்கமுடியவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உருவகப்படுத்துவது விநாயகரின் பானை வயிறு.


குபேரன் ஒருமுறை ஒரு பிரம்மாண்டமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். விநாயகப் பெருமான், விருந்திற்குப் படைக்கப் பெற்ற அனைத்து உணவுப் பண்டங்களையும் உண்டு விட்டு பசியடங்காமல் தவித்தார். சிவபெருமான் தோன்றி ஒரு கையளவு வருத்த அரிசியை வழங்கினார் - அதனை உண்டவுடன் விநாயகரின் பசியாறியது. இந்தக் கதை விளக்கும் தத்துவம் - மனிதன் குபேர சம்பத்துகளால் ஒருபோதும் திருப்தி அடைய இயலாது. பொருட்களின் பின்னால் உள்ள ஆசை ஒரு போதும் திருப்தியையோ, அமைதியையோ தரவியலாது. உண்மையான தத்துவத்தினை அறிய ஒரே வழி 'வாஸனை' எனப்படு தன் ஆசைகளை ஒருவன் கொன்று தின்பதே. அரிசி வருக்கப்படும் போது தன்னுடைய 'உயிர்த்' தன்மையை இழக்கிறது. அதனால் மறுபடியும் முளைவிட இயலாது. ஆசைகளைக் கொல்வதே வருத்த அரிசியின் உட்கொண்டதன் மூலம் உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. விநாயகரது இடக்கையிலிருக்கும் வருத்த அரிசி உணர்த்தும் தத்துவம் இதுவே.


விநாயகர் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை பூமியில் பதித்தும் அமர்ந்த நிலையில் காண்பிக்கப்படுகிறார். இது ஒரு மனிதன் பூமியிலிருக்கும் போது மற்றெந்த மனிதனைப் போல் வாழ்வதையும், அவனுடைய மனம் மட்டுமே உள் திரும்பி ஆத்மாவில் லயித்திருப்பதையும் காண்பிக்கிறது.


விநாயகரின் காலடியில் பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவு வகைகள் உலக இன்பங்களையும், செல்வத்தினையும் குறிக்கிறது. மேற்கூரிய வகைககளில் வாழும் ஒருவனின் காலடியில் உலக செல்வங்களனைத்தும் குவிந்து கொடுக்கும் என்னும் தத்துவத்தினை உணர்த்துவது இது. அவனுக்கு இச்செல்வங்கள் ஒரு பொருட்டேயில்லையெனினும், அவை அனைத்தும் அவன் காலடியில் அடிமையாகக் கிடக்கும்.


உணவுப் பண்டங்களுக்கிடையே ஒரு மூஞ்சூறு உணவினைத் தொடாமல் விநாயரின் அனுமதி வேண்டி நின்றிருக்கும். மூஞ்சூறு (எலி) ஆசைகளை உருவகப்படுத்துகிறது. எலிக்கு சிறிய வாய் மற்றும் கூரிய பற்கள் உண்டு. ஆனால் எலி மிகுந்த பேராசை கொண்டது. அதனுடைய ஆசை எவ்வளவு பெரியது என்றால் எப்போதுமே தனது தேவைக்கு மேலேயே உணவினைச் சேர்த்து வைக்கும் - பலமுறை எந்த இடத்தினில் சேர்த்தோம் என்ற அறிவின்றி பல வளைகளிலும் உணவினைச் சேர்த்து வைக்கும். எலிகள் பேராசையின் மொத்த உருவம். இத்தகைய குணம் உள்ள எலி பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவுப் பொருட்களின் மத்தியிலிருந்தும், அவற்றினைத் தொடாமல் விநாயகரின் அனுமதி வேண்டி அமர்ந்திருக்கிறது. இது உணர்த்துவது யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன் ஆசைகளின் மேல் முழுமையான் ஆளுமை உடையவனாக இருப்பான். உலகச் சபலங்கள் அவனை எதுவும் செய்ய முடியாது. இத்தகையவனுடைய செயல் பாடுகள், அவனுடைய தெளிந்த சிந்தனையின் பால் நடக்குமே தவிர, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படமாட்டா.


ஒரு புராணக் கதையின் படி சந்திரன் ஒருமுறை பெருத்த உருவமுடைய விநாயகர், சிறிய மூஞ்சூறுவின் மீது பயணம் செய்ததைப் பார்த்து சிரித்தது. இந்த குற்றத்தினால் விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பது தவறு என்பது ஹிந்து மக்களின் ஒரு நம்பிக்கை. விநாயகர், மூஞ்சுறுவின் மேல் சவாரி செய்வதன் உள் அர்த்தம் யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன்னுடைய உடல், உலக அறிவு, மற்றும் மனதின் மூலம் அறியமுடியா பேருண்மையை உணர்த்த முயற்சிப்பதுவே. உடல், மனம் மற்றும் உலக அறிவு என்பவை முடிவுள்ளவை. இவற்றின் மூலம் 'ஆன்மா' வின் பேருண்மையை விளக்க இயலாது. சந்திரன் மனதின் கடவுள். சாதாரண மனம் கொண்ட மனிதனால் பேருண்மையினை உணர முடிவதில்லை. அந்த அறியாமையினாலேயே அவன் பூரணத்துவம் பெற்றவர்கள், மற்றும் அவர்களது செய்கைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்கிறான். இத்தகைய மகான்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் சந்திரனைப் போலவே நிலையற்ற தன்மை பெற்று வருந்துவார்கள் என்பதனையே விநாயகரின் மூஷிக வாகனப் பயணம் உணர்த்துகிறது.


விநாயகருக்கு நான்கு கரங்கள் உண்டு. இவை மனிதனின் உள் சக்திகளான 'மனஸ்' (மனது), 'புத்தி' (அறிவு), 'அஹங்காரம்' (அகந்தை) மற்றும் 'சித்' (பேரறிவு, மெஞ்ஞான சிந்தனை) என்பனவற்றைக் குறிக்கும். ஒரு கையில் கோடரியும், ஒரு கையில் கயிற்றையும், ஒரு கையில் வருத்த அரிசி உருண்டையையும் (மோதகம்) , நான்காவது கையினில் தாமரைப் பூவையும் கொண்டிருக்கிறார். கோடரி உலகப் பற்றினையும், ஆசைகளையும் அவற்றினால் விளையும் கோப, தாபங்களையும் வெட்டி விட வேண்டும் என்பதனை குறிக்கிறது. கயிறானது உலக பந்தங்களில் இருந்து ஒருவனை விடுவித்து நிலையான உண்மையான தன்னை உணர்தல் எனும் உணர்விற்கு கட்டிப் போடுவதை (பிணைப்பதை) உணர்த்துகிறது. மோதகம் தேடுதலுடைய ஒருவன் அடையப் போகும் நிலையான இன்பத்தைக் குறிக்கிறது. தாமரை பூ மனித பரிணாமவளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோளினைக் குறிக்கும்.


ஒவ்வொரு முறை விநாயகப் பெருமானை வணங்கும் போதும், அவரது உருவ அமைப்பு விளக்கும் இத்தகைய உயர்ந்த தத்துவங்களை மனதினிருத்திப் ப்ரார்த்திப்பது நம் அனைவருக்கும் கைவரப்பெற முழுமுதற் கடவுளான விநாயகனைப் வேண்டுகிறேன்.



Friday, March 7, 2008

ஹிந்து மதம் - பல தெய்வ வழிபாடு? (பகுதி 2)

பாரத தேசம் என்றுமே ஒரு மிகப்பெரிய ஆன்மீக வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஹிந்துமதத்தின் ஆசார்யர்களும், பண்டிதர்களும் இந்த உண்மைகளையும், ஆன்மீக கலாசாரத்தையும் மக்களின் வாழ்வியலில் 'உயிர்ப்போடு' வைத்திருந்தனர். வேதாந்தங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை மற்றும் ப்ரம்மஸூத்திரங்களை ஆசார்யர்களும், பண்டிதர்களும் கற்றனர். சாதாரண ஜனங்களுக்கு இவை புரிவது இன்னும் கடினமான பணியே. அதனாலேயே இந்த உபநிஷத சாரங்கள், மற்றும் ப்ரம்ம தத்துவங்கள் எளிய புராணக் கதைகள் மூலமும், வழிபாட்டு முறைகள் மூலமும், உருவங்கள், சின்னங்கள் மூலமாயும் விளக்கப்பெற்றன. வேத மூலமும், அதன் உண்மைகளும் இத்தகைய சாதாரண விளக்கங்கள் மூலமாகவே தலைமுறை, தலைமுறைகளாக பேணி பாதுகாத்து, பரப்பப்பட்டுள்ளன.

புராணங்களில் அநேகக் கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில் இவற்றை படிப்போர் "இது என்ன முட்டாள்தனம்?" என்று வியக்கும் அளவிற்கு சில விஷயங்கள் பெரிதுபடுத்திக் (exaggeration) காட்டப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் நமக்கு உணர்த்துவது என்னவெனில், கதைகளை மேலோட்டமாகப் படிக்காமல், அதன் உள் அர்த்ததை உணர முயற்சி செய் என நினைவூட்டுவதற்காகத்தான். பெரும்பாலான மக்களும், அறிவுசாலிகளும் புராணங்களின் இந்த விஷயத்தை புரிந்தேயுள்ளனர். அதனாலேயே இன்றளவும் இப் புராணக் கதைகளும், சடங்கு, சம்பிரதாயங்களும் மக்களால் பரவலாக அங்கீகரிக்கப்படுகின்றன. இங்கே இந்தக் கதைகளின் வரிகளை மேலோட்டமாக படித்துவிட்டு ஆடும் சில ஜன்மங்களும் உண்டு. அவை பண்பட மேலும் சில ஜன்மாக்கள் தேவை என்பதைத் தவிர, வேரெந்த்த முக்கியத்துவமும் கொடுக்கப்படத் தேவையில்லை.

'Religion' எனும் ஆங்கில வார்த்தை, இலத்தீன் மொழியினின்று கொணரப்பெற்றது. 're' என்றால் மீண்டும், 'ligare' என்றால் பிணைக்கப்படுதல், ஒன்றுபடுத்துதல். 'religion' என்றால் 'எது ஒருவனை தன்னுடைய மூலத்திற்கு மீண்டும் பிணைக்கிறதோ அது'. மனிதனுடைய மூலத்தன்மை, அவனேயாவான். மதம் ஒருவனுக்கு தன்னுடைய உண்மையான 'தன்னை' உணர உதவ வேண்டும். ஸனாதன தர்மம் இந்தக் கடமையை விஞ்ஞான பூர்வமாயும், ஒருங்கமைப்போடும் செய்யவல்லது.

ஸனாதன தர்மத்தின் தத்துவங்களும், ஆன்மீக உண்மைகளும் பொது ஜனங்களுக்கு, பல்வேறு உருவங்கள், சின்னங்கள் மூலமாயும் பிரபலபடுத்தப்பட்டுள்ளன. ஒரு உருவத்தின் அடிப்படை 'தெரிந்த அடையாளத்தின் மூலம் தெரியாத உண்மையை உருவகப் படுத்துதல்'. தெய்வ உருவகங்கள் கலையானது, கற்றவர்களிடமும், கல்லாதவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. கல்லாதவர் உருவங்களின் மூலம், சிறிதளவாவது உண்மைகளை உணர முடியும். கற்றரிந்தோர் மேலும் உண்மைகளை உணர உந்தப்படுவர். மற்ற எந்த மதத்தினையும் விட ஹிந்து மதம் இந்த கலையை நன்றாக போதித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்கால சந்ததியினர் இந்த அடையாள, உருவகங்களின் உண்மையான விளக்கங்களை உணர முயற்சிக்காமல், மூட நம்பிக்கை என்று இவற்றை சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் நம் பின்வரும் சந்ததியினர் இவற்றை கண்மூடித் தனமாக ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்வர்.

இன்றைய தேவை, இந்த கலையின் உள் அர்த்தத்தினை புரிந்து மற்றவர்களுக்கும் அதை கற்பித்தலாகும். நம் தெய்வ சிலைகளின் உருவங்களின் தத்துவங்களும், தாத்பரியங்களும் வியக்க வைப்பவை. நம் சம்பிரதாயங்களுக்கும், சடங்குகளுக்கும், பண்டிகைகளுக்கும் பின்னால் இருக்கும் தத்துவங்கள் நம்மால் சிந்திக்க இயலாதவை. இறைவன் அருளால் நான் என் பெரியோர்களிடம் கேட்டறிந்த, படித்தறிந்த சிலவற்றை பின்வரும் பதிவுகளில் எழுதலாமென்றிருக்கிறேன்.

ஹிந்து மதம் - பல தெய்வ வழிபாடு? (பகுதி 1)

ஹிந்து மதம் பல இதிகாசங்களையும், தேவ தேவியர் பற்றிய புராணங்களையும், பல வழிபாட்டு முறைகளையும், பண்டிகைகளையும் கொண்ட ஒரு விந்தையான கலவை. பெரும்பாலான ஹிந்துக்கள் இத்தகைய தொகுப்பினால் குழப்பமடைந்துள்ளனர். ஹிந்துயிஸம் என்றரியப் படுகின்ற ஸனாதன தர்மத்தின் அடிப்ப்டையான வேதங்கள் - உண்மையான இறைபொருள் ஒன்றே, ஒன்று மட்டுமே என்று அறுதியிட்டு உரைத்துள்ளன. பிறகு ஏன் ஹிந்துக்கள் பல தெய்வங்களையும், பல வழிபாட்டு முறைகளையும் (இவை சில சமயங்களில் ஒன்றிற்கொன்று விரோதமாயுமுள்ளன) பின்பற்றுகின்றனர்? ஏன் இத்தனை தெய்வங்கள்? ஏன் இத்தனை பிளவுகள்? ஏன் ஹிந்து மதம், பிற ஆபிரகாமிய மதங்களைப் போல் ஒரு தெய்வம், ஒரு வழிபாட்டு முறை என்று வரையறுக்கவில்லை? இத்தகைய கேள்விகள் சாதாரண ஜனங்களையும், அறிஞர்களையும் பல்லாண்டுகளாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனை சிறிதளவாவது புரிந்து கொள்ள முயற்சித்தால் பல உண்மைகளை நாம் அறிய முடியும். இதற்கு தேவை சார்பற்ற ஒரு தூய மனநிலை மட்டுமே.

அடிப்படையான ஒரு விஷயம் - "ஹிந்துக்கள் பல தெய்வங்களை வழிபடுவதில்லை. ஒரே தெய்வத்தின் சக்திகளின் மற்றும் செயல்பாடுகளின் உருவகங்களையே வழிபடுகின்றனர்". ஸனாதன தர்மக் கோட்பாடுகளின் படி, ஒரே ஒரு தெய்வம் மட்டுமே உள்ளது - அது ஆத்மா, ப்ரம்மம் என்று அறியப்படுகிறது.

மனித மனத்தின் பன்முகத்தன்மை அளவிடயிலாதது. ஸனாதன தர்மம் மட்டுமே இத்தகைய பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்ப்ட்டது. ஒவ்வொரு மனிதனும், மனித மனமும் தனித்தன்மையுடையது. பல நோய்களுடையது. எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து தீர்வாகாது. ஹிந்து மதம் ஒரு பெரிய மருத்துவமனை போன்றது. ஒவ்வொரு நோய் பிரிவிற்கும் தகுதியான மருத்துவர்களும், உபகரணங்களும் உள்ளது போல வெவ்வேறு மனத் தகுதியுடையோருக்காக பல தெய்வஸ்வரூபங்களும், வழிபாட்டு முறைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன.

மனித மனங்கள் 'வாஸனை' என்றரியப்படும் ஆசைகளால் கட்டப்பட்டுள்ளன. மனதில் ஆசைகள் இருக்கும் வரை, எண்ணங்கள் தறிகெட்டு அலைவதைக் கட்டுப்படுத்த இயலாது. ஆசைகள் நிறைவேறாத போது, மனம் கொந்தழிக்கும், ஆத்திரப்படும். இத்தகைய மனதினை ஒருமுகப் படுத்த இயலாது. இது தன்னை அறிந்து கொள்ளல் என்னும் உயர்ந்த பாதைக்குப் போகும் வழியன்று. தர்மம் (மதம்) எனப் படுவது, ஒரு மனிதனின் உலகப் பொருட்களின் மோகத்திலிருந்து திசைதிருப்பி, உள்திரும்பி தன்னை உணர தகுதியுள்ளவனாக ஆக்க வேண்டி உருவாக்கப்பெற்றவை. ஆனால் உலகப் பொருட்களின் ஈர்ப்புத்தன்மைகளை வெல்லுதல் அனைவருக்கும் சாதாரணமாகக் கைவரப்பெறுவதில்லை. இங்கே தான் ஸனாதன தர்மத்தை வரையறுத்த நம் முன்னோர்களின் அறிவுப்ரகாசம் தெரிகிறது. ஒவ்வொரு மனித ஆசைகளுக்கும், ஒவ்வொரு தெய்வத் தன்மையை வடிவமைத்தனர். அதற்கான வழிபாட்டுமுறைகளையும் உண்டாக்கினர். இதன் மூலம், மனிதன் புலன்களால் ஆளப்பட்டு செய்கின்ற செயல்களிலும் தெய்வத்தன்மையைப் புகுத்தினர். இதன் மூலம், மனிதன் உலகப் பொருட்களின் ஆளுமையில், ஆசைகளில் செய்கைகள் செய்தாலும், தன்னை மிஞ்சிய இறைபொருளை மறக்காதிருக்க செய்யப்பட்டான்.

எடுத்துக்காட்டாக, செல்வத்திற்கான தெய்வமாக 'லக்ஷ்மி' தேவி உருவகப்படுத்தப்பட்டாள். இதன் பலனாக, செல்வத்தின் பின்னால் அலையும் மனித மனம், லக்ஷ்மிதேவியின் வடிவில் தெய்வசிந்தனைக்கு உள்ளானது. உலகக் கல்வியின் பின்னால் அலைபவனின் மனம் 'சரஸ்வதி' தேவியினைத் துதிக்கப் பணிக்கப்பெற்றது. வீரத்திற்காக பார்வதியின் அம்சமான காளி முதலான தேவியர் உருவகப்படுத்தப் பெற்றனர். இதன் மூலம், மனிதன் உலக இன்பங்களைத் தேடி ஓடினாலும், அவனை அறியாமலேயே தெய்வ சிந்தனையும் அவனுடைய காரண, காரியங்களில் உட்படுத்தப்பட்டது. இந்த ஒரு காரணத்தினாலேயே இத்தனை தெய்வங்கள், வழிபாட்டு முறைகள்.

ஸனாதன தர்மம், மனித மனங்களின் தனித்துவத்தை மதிக்கிறது. உலகத்தின் முதல் மனித உரிமை கழகம் ஸனாதன தர்மம் எனலாம்.
ஸனாதன் தர்மம், தன்னை அறியாமலேயே ஒரு மனிதனை தன்னை உணரும் உன்னத பாதையில் திருப்புகிறது. ஒரு சமுதாயக் கட்டமைப்பை உருவாக்குகிறது. உலகத்தின் முதல் சட்டமும் இதுவே.

இத்தகைய கட்டமைப்பு தான் ஸனாதன தர்மத்தின் உயிர்நாடி. எத்தனையோ ஆண்டுகளாக நாம் பிறமதத்தினராலும், நாத்திகராலும் ஆளப்பட்டு, நசுக்கப்பட்டும் ஹிந்து மதம் இன்றும் தழைத்தோங்குவதற்க்கு காரணம். நம் வாழ்வியல், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யவேண்டிய சடங்குகள் மூலம் இறைச் சிந்தனை நம்முள் விதைக்கப்படுகிறது.

-- தொடரும்--