Thursday, July 10, 2008

சுப்ரமண்யன்/முருகன் திருவுருவம் - ஒரு புரிதல்



முருக கடவுள், முழுமுதற்கடவுளான விநாயகரின் இளையர், சிவ பார்வதியரின் இரண்டாவது புதல்வர். அழகின் இலக்கணமாகிய இவர் கார்திகை நக்ஷத்ரத்தில் உதித்ததால் கார்திகேயன் என்றும், ஆறுமுகங்களைக் கொண்டதால் ஷண்முகன் என்றும் அன்போடு போற்றப்படுபவர். மற்ற தெய்வங்களைப் போலவே முருகனின் உருவமும், முழுமையான தத்துவத்தை உணர்த்துகிறது.




சாதாரண மாக்களாகிய நாம் அனைவருமே 'ஜாக்ரத்' எனும் விழிப்பு, 'ஸ்வப்ன' எனும் கனவு, 'ஸுஷுப்தி' எனும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளிலேயே உழல்கிறோம். இவை மூன்றையும் கடந்த உயரிய நான்காவது நிலையே 'துரிய' எனப்படும் 'தெய்வநிலை'. இந்த நிலையினை தம் வாழ்நாளிலேயே அனுபவிப்பர் இன்று யாருமில்லை. ஆதி சங்கரர் போன்ற மஹா புருஷர்கள் இத்தகைய தெய்வநிலையினை அனுபவித்தவர்கள். ஆனால் இதுவே ஹிந்து தர்மம் போதிக்கும், மனிதனின் உண்மையான, அடிமுடிவற்ற ஸ்வரூபம். இந்த துரிய நிலையினையே முருகனின் திருவுருவம் உணர்த்துகிறது.




முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார். பெரும்பாலான ஹிந்து மத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை. வாஸனைகளும், அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூல காரணம். இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணர முதல் தடை. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான். வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான். முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல், இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்.



முருகனின் வாகனம் மயில். மயிலானது தன்னுடைய அழகிய தோற்றத்தில் மற்றவரின் மதி மயங்கச்செய்யவல்லது. தன்னுடைய தோகை விரித்து ஆடி, அவ்வழகின் மூலம் ஒருவனை மோகம் கொள்ளச்செய்யவல்லது. மனிதன் தன்னுடைய உடல் அழகு, புத்திசாலித்தனம், மற்றும் அலைபாயும் மனது ஆகியவற்றின் மீதே மோகம் கொண்டுள்ளான் என்பதை மயில் உணர்த்துகிறது. அவன் தன்னைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியும், புரியும் விடயங்களையே சிந்தித்து தன்னை ஒரு மனித எல்கைக்குள் அடைத்துக் கொள்கிறான். மயிலின் கழுத்தின் உண்மையான நிறம் நீலம். நீல நிறம் 'எல்லையற்ற' தன்மையை உருவகப் படுத்துகிறது. எப்படி மயில் தோகை விரித்து ஆடுகையில், நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி, உண்மையான நீல நிறம் புலப்படுவதில்லையோ, அதே போல் மனிதன் புற அழகினில் மயங்கி, எல்லையற்றதாகிய, தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணர முடிவதில்லை. தன்னுடைய உடல், மன, புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீல நிறமாகிய மயில் மேல் முருகன் செல்வதைப் போல தன் கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம்.



முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். நாகம் கொல்லப்படுவதில்லை ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் உணர்ந்துவது ஒருவனுடைய 'அகந்தை'. நாகத்தின் விஷம் நாகத்தினை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம். அதே போல் ஒருவனுடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை. ஆனால் அதையே வெளிக்காட்டினால், அதனால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்ட விளைவுகள் ஏற்படும். ஆகவே விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.


முருகனின் மற்றொரு உருவம், ஷண்முகன் எனப்படும் ஆறுமுகம். இறைவன் பஞ்ச பூதங்கள் (அல்லது ஐந்து புரிதல் உறுப்புகள் (five sense organs)) மற்றும் ஒரு மனதின் வாயிலாக காட்சியளிக்கிறான். உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு எந்தவிதமான் உருவகப்படுத்துதலும் கிடையாது. மனமானது ஐந்து புரிதல் உறுப்புக்கள் மூலம் தன்னை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகிறது. அதனை அடக்கியாள்பவனே தன்னில் இறைவனை உணர்வான்.


இத்தகைய மேலான முருகனின் திருவுருவம் உணர்த்தும் தத்துவதினை உணர்ந்து அவன் பாதம் பணிந்து நாம் உண்மையினை உணர்வோமாக!

Friday, March 14, 2008

விநாயகர் - முழு முதற் கடவுள்



விக்னேஸ்வரர் - விக்னங்களை (தடைகளை) நீக்குபவர் நமது ஹிந்து தேசத்தில் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவர். நம் புராணங்களில் விநாயகர் யானை தலையும், மனித உடலும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு தந்தம் பாதி உடைந்ததாயும், பெரிய வயிற்றை உடையவராயும், ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காலடியில் பலவகையான உணவு வகைகள் பரப்பப்பட்டிருக்கும். ஒரு சுண்டெலி(மூஞ்சூறு) உணவின் இடையில் அவரை வேண்டி அமர்ந்திருக்கும். அவரது உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது.


ஆன்மிக கல்வியின் முதல் படி 'ச்ரவணம்' எனப்பெறும் வேதாந்த உண்மைகளைக் கேட்டல். இரண்டாவது படி, 'மனனம்' எனப்பெறும் கேட்ட வேதாந்த உண்மைகளின் சுய புரிதல்/தெளிதல். விநாயகரின் பெரிய காதுகள் மற்றும் பெரிய தலை அவரது ச்ரவணம் மற்றும் மனனம் குணங்களைக் குறிக்கின்றன.


அவரது முகத்திலிருந்து வெளிப்படும் துதிக்கை அறிவையும், அறிவால் வெளிப்படும் பகுத்தறியும் (திராவிட பகுத்தறிவு அல்ல) திறனையும் குறிக்கும். மனிதனின் அறிவு நமது வேதாந்தங்களின்படி இரு வகைப்படும் - பொது (புற) அறிவு மற்றும் உள் (அக) அறிவு. உலகப் பொருட்களின் எதிர்மறை வித்தியாசத்தை உணர்த்துவது பொது பகுத்தறிவு - எ.கா., இரவு-பகல், கருப்பு-வெள்ளை, சந்தோஷம்-வருத்தம் முதலியவற்றைப் பற்றிய அறிவு. உள் பகுத்தறிவு என்பது நிலையான உண்மை-மாயை, முடிவுள்ளது-முடிவற்றது, புறஉலகம் (terrestrial) (கண்ணுக்குத் தெரிவது) -ஆன்மிகஉலகம் (Transcendental - கண்ணுக்கு தெரியாதது) போன்ற உயரிய சிந்தனைகளப் பற்றிய அறிவாகும். விநாயகரின் துதிக்கை இந்த தத்துவத்தைக் குறிக்கும். யானைகளின் துதிக்கை மற்ற எல்லா உறுப்புகளைவிட சிறப்பானது. துதிக்கையினால் தரையில் இருக்கும் ஒரு குண்டுசியையும் எடுக்கமுடியும், மற்றும் பெரிய மரத்தையும் வேரோடு எடுக்க முடியும். இதைப்போன்ற எதிர் மறை செயல்கள் புரியக்கூடிய ஒரு கருவி இருப்பதரிது. விநாயகர் பெரிய மரம் போன்ற புற உலக அறிவையும், கண்ணுக்குப் புலப்படாத சிறிய ஊசி போன்ற அக அறிவையும் ஒருங்கே உணர்ந்தரிந்தவர் என்பதையே அவரது துதிக்கை குறிக்கிறது.


மனித பூரணத்துவம் உயர்ந்த தத்துவ அறிவைப் பெறுவதனாலேயே சாத்தியம். பூரணத்துவம் பெற்ற மனிதன் உலக எதிர்மறைகளால் பாதிக்கப்படுவதில்லை. சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, குளிர்ச்சி-வெப்பம், மதிப்பு-அவமரியாதை போன்ற புற உலக எதிர்மறைகள் அவனை பாதிப்பதில்லை. சாதாரண மனிதன் உலகத்தின் இத்தகைய எதிர்மறைகளுக்கிடையே அல்லாடிக்கொண்டிருக்கிறான். இந்த விஷயத்தையே விநாயகரின் இரு தந்தங்களும் உருவகப் படுத்துகின்றன. அவற்றில் ஒன்று உடைந்திருப்பது உலக எதிர்மறைகளை உடைத்தெரியத் தயங்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்கே. புற உலகில் தந்தங்கள் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் உண்மையான அறிவு ஏற்பட இந்த உலக பொருட்களைப் பற்றிய பற்றுதலை (அதுவும் நாமே) உடைத்தெறிய வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்கே ஒரு தந்தத்தை தானே உடைத்து கையில் வைத்திருப்பதாக விநாயகர் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்.


விநாயகருடைய பெரிய பானை வயிறு குறிப்பது யாதெனில் பூரணத்துவம் பெற்ற மனிதன் எத்தகைய விஷயத்தையும், அனுபவத்தையும் உட்கொண்டு சீரணித்த பின்னும், நிலையான சிந்தனையுடன் இருக்க முடியும் என்பதையே. எத்தகைய சோதனைகளையும், பிறப்பு-இறப்பு அனுபவங்களையும் ஒருவனால் ஒரே மாதிரி சீரணிக்கமுடியவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உருவகப்படுத்துவது விநாயகரின் பானை வயிறு.


குபேரன் ஒருமுறை ஒரு பிரம்மாண்டமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். விநாயகப் பெருமான், விருந்திற்குப் படைக்கப் பெற்ற அனைத்து உணவுப் பண்டங்களையும் உண்டு விட்டு பசியடங்காமல் தவித்தார். சிவபெருமான் தோன்றி ஒரு கையளவு வருத்த அரிசியை வழங்கினார் - அதனை உண்டவுடன் விநாயகரின் பசியாறியது. இந்தக் கதை விளக்கும் தத்துவம் - மனிதன் குபேர சம்பத்துகளால் ஒருபோதும் திருப்தி அடைய இயலாது. பொருட்களின் பின்னால் உள்ள ஆசை ஒரு போதும் திருப்தியையோ, அமைதியையோ தரவியலாது. உண்மையான தத்துவத்தினை அறிய ஒரே வழி 'வாஸனை' எனப்படு தன் ஆசைகளை ஒருவன் கொன்று தின்பதே. அரிசி வருக்கப்படும் போது தன்னுடைய 'உயிர்த்' தன்மையை இழக்கிறது. அதனால் மறுபடியும் முளைவிட இயலாது. ஆசைகளைக் கொல்வதே வருத்த அரிசியின் உட்கொண்டதன் மூலம் உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. விநாயகரது இடக்கையிலிருக்கும் வருத்த அரிசி உணர்த்தும் தத்துவம் இதுவே.


விநாயகர் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை பூமியில் பதித்தும் அமர்ந்த நிலையில் காண்பிக்கப்படுகிறார். இது ஒரு மனிதன் பூமியிலிருக்கும் போது மற்றெந்த மனிதனைப் போல் வாழ்வதையும், அவனுடைய மனம் மட்டுமே உள் திரும்பி ஆத்மாவில் லயித்திருப்பதையும் காண்பிக்கிறது.


விநாயகரின் காலடியில் பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவு வகைகள் உலக இன்பங்களையும், செல்வத்தினையும் குறிக்கிறது. மேற்கூரிய வகைககளில் வாழும் ஒருவனின் காலடியில் உலக செல்வங்களனைத்தும் குவிந்து கொடுக்கும் என்னும் தத்துவத்தினை உணர்த்துவது இது. அவனுக்கு இச்செல்வங்கள் ஒரு பொருட்டேயில்லையெனினும், அவை அனைத்தும் அவன் காலடியில் அடிமையாகக் கிடக்கும்.


உணவுப் பண்டங்களுக்கிடையே ஒரு மூஞ்சூறு உணவினைத் தொடாமல் விநாயரின் அனுமதி வேண்டி நின்றிருக்கும். மூஞ்சூறு (எலி) ஆசைகளை உருவகப்படுத்துகிறது. எலிக்கு சிறிய வாய் மற்றும் கூரிய பற்கள் உண்டு. ஆனால் எலி மிகுந்த பேராசை கொண்டது. அதனுடைய ஆசை எவ்வளவு பெரியது என்றால் எப்போதுமே தனது தேவைக்கு மேலேயே உணவினைச் சேர்த்து வைக்கும் - பலமுறை எந்த இடத்தினில் சேர்த்தோம் என்ற அறிவின்றி பல வளைகளிலும் உணவினைச் சேர்த்து வைக்கும். எலிகள் பேராசையின் மொத்த உருவம். இத்தகைய குணம் உள்ள எலி பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவுப் பொருட்களின் மத்தியிலிருந்தும், அவற்றினைத் தொடாமல் விநாயகரின் அனுமதி வேண்டி அமர்ந்திருக்கிறது. இது உணர்த்துவது யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன் ஆசைகளின் மேல் முழுமையான் ஆளுமை உடையவனாக இருப்பான். உலகச் சபலங்கள் அவனை எதுவும் செய்ய முடியாது. இத்தகையவனுடைய செயல் பாடுகள், அவனுடைய தெளிந்த சிந்தனையின் பால் நடக்குமே தவிர, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படமாட்டா.


ஒரு புராணக் கதையின் படி சந்திரன் ஒருமுறை பெருத்த உருவமுடைய விநாயகர், சிறிய மூஞ்சூறுவின் மீது பயணம் செய்ததைப் பார்த்து சிரித்தது. இந்த குற்றத்தினால் விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பது தவறு என்பது ஹிந்து மக்களின் ஒரு நம்பிக்கை. விநாயகர், மூஞ்சுறுவின் மேல் சவாரி செய்வதன் உள் அர்த்தம் யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன்னுடைய உடல், உலக அறிவு, மற்றும் மனதின் மூலம் அறியமுடியா பேருண்மையை உணர்த்த முயற்சிப்பதுவே. உடல், மனம் மற்றும் உலக அறிவு என்பவை முடிவுள்ளவை. இவற்றின் மூலம் 'ஆன்மா' வின் பேருண்மையை விளக்க இயலாது. சந்திரன் மனதின் கடவுள். சாதாரண மனம் கொண்ட மனிதனால் பேருண்மையினை உணர முடிவதில்லை. அந்த அறியாமையினாலேயே அவன் பூரணத்துவம் பெற்றவர்கள், மற்றும் அவர்களது செய்கைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்கிறான். இத்தகைய மகான்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் சந்திரனைப் போலவே நிலையற்ற தன்மை பெற்று வருந்துவார்கள் என்பதனையே விநாயகரின் மூஷிக வாகனப் பயணம் உணர்த்துகிறது.


விநாயகருக்கு நான்கு கரங்கள் உண்டு. இவை மனிதனின் உள் சக்திகளான 'மனஸ்' (மனது), 'புத்தி' (அறிவு), 'அஹங்காரம்' (அகந்தை) மற்றும் 'சித்' (பேரறிவு, மெஞ்ஞான சிந்தனை) என்பனவற்றைக் குறிக்கும். ஒரு கையில் கோடரியும், ஒரு கையில் கயிற்றையும், ஒரு கையில் வருத்த அரிசி உருண்டையையும் (மோதகம்) , நான்காவது கையினில் தாமரைப் பூவையும் கொண்டிருக்கிறார். கோடரி உலகப் பற்றினையும், ஆசைகளையும் அவற்றினால் விளையும் கோப, தாபங்களையும் வெட்டி விட வேண்டும் என்பதனை குறிக்கிறது. கயிறானது உலக பந்தங்களில் இருந்து ஒருவனை விடுவித்து நிலையான உண்மையான தன்னை உணர்தல் எனும் உணர்விற்கு கட்டிப் போடுவதை (பிணைப்பதை) உணர்த்துகிறது. மோதகம் தேடுதலுடைய ஒருவன் அடையப் போகும் நிலையான இன்பத்தைக் குறிக்கிறது. தாமரை பூ மனித பரிணாமவளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோளினைக் குறிக்கும்.


ஒவ்வொரு முறை விநாயகப் பெருமானை வணங்கும் போதும், அவரது உருவ அமைப்பு விளக்கும் இத்தகைய உயர்ந்த தத்துவங்களை மனதினிருத்திப் ப்ரார்த்திப்பது நம் அனைவருக்கும் கைவரப்பெற முழுமுதற் கடவுளான விநாயகனைப் வேண்டுகிறேன்.



Friday, March 7, 2008

ஹிந்து மதம் - பல தெய்வ வழிபாடு? (பகுதி 2)

பாரத தேசம் என்றுமே ஒரு மிகப்பெரிய ஆன்மீக வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஹிந்துமதத்தின் ஆசார்யர்களும், பண்டிதர்களும் இந்த உண்மைகளையும், ஆன்மீக கலாசாரத்தையும் மக்களின் வாழ்வியலில் 'உயிர்ப்போடு' வைத்திருந்தனர். வேதாந்தங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை மற்றும் ப்ரம்மஸூத்திரங்களை ஆசார்யர்களும், பண்டிதர்களும் கற்றனர். சாதாரண ஜனங்களுக்கு இவை புரிவது இன்னும் கடினமான பணியே. அதனாலேயே இந்த உபநிஷத சாரங்கள், மற்றும் ப்ரம்ம தத்துவங்கள் எளிய புராணக் கதைகள் மூலமும், வழிபாட்டு முறைகள் மூலமும், உருவங்கள், சின்னங்கள் மூலமாயும் விளக்கப்பெற்றன. வேத மூலமும், அதன் உண்மைகளும் இத்தகைய சாதாரண விளக்கங்கள் மூலமாகவே தலைமுறை, தலைமுறைகளாக பேணி பாதுகாத்து, பரப்பப்பட்டுள்ளன.

புராணங்களில் அநேகக் கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில் இவற்றை படிப்போர் "இது என்ன முட்டாள்தனம்?" என்று வியக்கும் அளவிற்கு சில விஷயங்கள் பெரிதுபடுத்திக் (exaggeration) காட்டப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் நமக்கு உணர்த்துவது என்னவெனில், கதைகளை மேலோட்டமாகப் படிக்காமல், அதன் உள் அர்த்ததை உணர முயற்சி செய் என நினைவூட்டுவதற்காகத்தான். பெரும்பாலான மக்களும், அறிவுசாலிகளும் புராணங்களின் இந்த விஷயத்தை புரிந்தேயுள்ளனர். அதனாலேயே இன்றளவும் இப் புராணக் கதைகளும், சடங்கு, சம்பிரதாயங்களும் மக்களால் பரவலாக அங்கீகரிக்கப்படுகின்றன. இங்கே இந்தக் கதைகளின் வரிகளை மேலோட்டமாக படித்துவிட்டு ஆடும் சில ஜன்மங்களும் உண்டு. அவை பண்பட மேலும் சில ஜன்மாக்கள் தேவை என்பதைத் தவிர, வேரெந்த்த முக்கியத்துவமும் கொடுக்கப்படத் தேவையில்லை.

'Religion' எனும் ஆங்கில வார்த்தை, இலத்தீன் மொழியினின்று கொணரப்பெற்றது. 're' என்றால் மீண்டும், 'ligare' என்றால் பிணைக்கப்படுதல், ஒன்றுபடுத்துதல். 'religion' என்றால் 'எது ஒருவனை தன்னுடைய மூலத்திற்கு மீண்டும் பிணைக்கிறதோ அது'. மனிதனுடைய மூலத்தன்மை, அவனேயாவான். மதம் ஒருவனுக்கு தன்னுடைய உண்மையான 'தன்னை' உணர உதவ வேண்டும். ஸனாதன தர்மம் இந்தக் கடமையை விஞ்ஞான பூர்வமாயும், ஒருங்கமைப்போடும் செய்யவல்லது.

ஸனாதன தர்மத்தின் தத்துவங்களும், ஆன்மீக உண்மைகளும் பொது ஜனங்களுக்கு, பல்வேறு உருவங்கள், சின்னங்கள் மூலமாயும் பிரபலபடுத்தப்பட்டுள்ளன. ஒரு உருவத்தின் அடிப்படை 'தெரிந்த அடையாளத்தின் மூலம் தெரியாத உண்மையை உருவகப் படுத்துதல்'. தெய்வ உருவகங்கள் கலையானது, கற்றவர்களிடமும், கல்லாதவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. கல்லாதவர் உருவங்களின் மூலம், சிறிதளவாவது உண்மைகளை உணர முடியும். கற்றரிந்தோர் மேலும் உண்மைகளை உணர உந்தப்படுவர். மற்ற எந்த மதத்தினையும் விட ஹிந்து மதம் இந்த கலையை நன்றாக போதித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்கால சந்ததியினர் இந்த அடையாள, உருவகங்களின் உண்மையான விளக்கங்களை உணர முயற்சிக்காமல், மூட நம்பிக்கை என்று இவற்றை சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் நம் பின்வரும் சந்ததியினர் இவற்றை கண்மூடித் தனமாக ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்வர்.

இன்றைய தேவை, இந்த கலையின் உள் அர்த்தத்தினை புரிந்து மற்றவர்களுக்கும் அதை கற்பித்தலாகும். நம் தெய்வ சிலைகளின் உருவங்களின் தத்துவங்களும், தாத்பரியங்களும் வியக்க வைப்பவை. நம் சம்பிரதாயங்களுக்கும், சடங்குகளுக்கும், பண்டிகைகளுக்கும் பின்னால் இருக்கும் தத்துவங்கள் நம்மால் சிந்திக்க இயலாதவை. இறைவன் அருளால் நான் என் பெரியோர்களிடம் கேட்டறிந்த, படித்தறிந்த சிலவற்றை பின்வரும் பதிவுகளில் எழுதலாமென்றிருக்கிறேன்.

ஹிந்து மதம் - பல தெய்வ வழிபாடு? (பகுதி 1)

ஹிந்து மதம் பல இதிகாசங்களையும், தேவ தேவியர் பற்றிய புராணங்களையும், பல வழிபாட்டு முறைகளையும், பண்டிகைகளையும் கொண்ட ஒரு விந்தையான கலவை. பெரும்பாலான ஹிந்துக்கள் இத்தகைய தொகுப்பினால் குழப்பமடைந்துள்ளனர். ஹிந்துயிஸம் என்றரியப் படுகின்ற ஸனாதன தர்மத்தின் அடிப்ப்டையான வேதங்கள் - உண்மையான இறைபொருள் ஒன்றே, ஒன்று மட்டுமே என்று அறுதியிட்டு உரைத்துள்ளன. பிறகு ஏன் ஹிந்துக்கள் பல தெய்வங்களையும், பல வழிபாட்டு முறைகளையும் (இவை சில சமயங்களில் ஒன்றிற்கொன்று விரோதமாயுமுள்ளன) பின்பற்றுகின்றனர்? ஏன் இத்தனை தெய்வங்கள்? ஏன் இத்தனை பிளவுகள்? ஏன் ஹிந்து மதம், பிற ஆபிரகாமிய மதங்களைப் போல் ஒரு தெய்வம், ஒரு வழிபாட்டு முறை என்று வரையறுக்கவில்லை? இத்தகைய கேள்விகள் சாதாரண ஜனங்களையும், அறிஞர்களையும் பல்லாண்டுகளாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனை சிறிதளவாவது புரிந்து கொள்ள முயற்சித்தால் பல உண்மைகளை நாம் அறிய முடியும். இதற்கு தேவை சார்பற்ற ஒரு தூய மனநிலை மட்டுமே.

அடிப்படையான ஒரு விஷயம் - "ஹிந்துக்கள் பல தெய்வங்களை வழிபடுவதில்லை. ஒரே தெய்வத்தின் சக்திகளின் மற்றும் செயல்பாடுகளின் உருவகங்களையே வழிபடுகின்றனர்". ஸனாதன தர்மக் கோட்பாடுகளின் படி, ஒரே ஒரு தெய்வம் மட்டுமே உள்ளது - அது ஆத்மா, ப்ரம்மம் என்று அறியப்படுகிறது.

மனித மனத்தின் பன்முகத்தன்மை அளவிடயிலாதது. ஸனாதன தர்மம் மட்டுமே இத்தகைய பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்ப்ட்டது. ஒவ்வொரு மனிதனும், மனித மனமும் தனித்தன்மையுடையது. பல நோய்களுடையது. எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து தீர்வாகாது. ஹிந்து மதம் ஒரு பெரிய மருத்துவமனை போன்றது. ஒவ்வொரு நோய் பிரிவிற்கும் தகுதியான மருத்துவர்களும், உபகரணங்களும் உள்ளது போல வெவ்வேறு மனத் தகுதியுடையோருக்காக பல தெய்வஸ்வரூபங்களும், வழிபாட்டு முறைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன.

மனித மனங்கள் 'வாஸனை' என்றரியப்படும் ஆசைகளால் கட்டப்பட்டுள்ளன. மனதில் ஆசைகள் இருக்கும் வரை, எண்ணங்கள் தறிகெட்டு அலைவதைக் கட்டுப்படுத்த இயலாது. ஆசைகள் நிறைவேறாத போது, மனம் கொந்தழிக்கும், ஆத்திரப்படும். இத்தகைய மனதினை ஒருமுகப் படுத்த இயலாது. இது தன்னை அறிந்து கொள்ளல் என்னும் உயர்ந்த பாதைக்குப் போகும் வழியன்று. தர்மம் (மதம்) எனப் படுவது, ஒரு மனிதனின் உலகப் பொருட்களின் மோகத்திலிருந்து திசைதிருப்பி, உள்திரும்பி தன்னை உணர தகுதியுள்ளவனாக ஆக்க வேண்டி உருவாக்கப்பெற்றவை. ஆனால் உலகப் பொருட்களின் ஈர்ப்புத்தன்மைகளை வெல்லுதல் அனைவருக்கும் சாதாரணமாகக் கைவரப்பெறுவதில்லை. இங்கே தான் ஸனாதன தர்மத்தை வரையறுத்த நம் முன்னோர்களின் அறிவுப்ரகாசம் தெரிகிறது. ஒவ்வொரு மனித ஆசைகளுக்கும், ஒவ்வொரு தெய்வத் தன்மையை வடிவமைத்தனர். அதற்கான வழிபாட்டுமுறைகளையும் உண்டாக்கினர். இதன் மூலம், மனிதன் புலன்களால் ஆளப்பட்டு செய்கின்ற செயல்களிலும் தெய்வத்தன்மையைப் புகுத்தினர். இதன் மூலம், மனிதன் உலகப் பொருட்களின் ஆளுமையில், ஆசைகளில் செய்கைகள் செய்தாலும், தன்னை மிஞ்சிய இறைபொருளை மறக்காதிருக்க செய்யப்பட்டான்.

எடுத்துக்காட்டாக, செல்வத்திற்கான தெய்வமாக 'லக்ஷ்மி' தேவி உருவகப்படுத்தப்பட்டாள். இதன் பலனாக, செல்வத்தின் பின்னால் அலையும் மனித மனம், லக்ஷ்மிதேவியின் வடிவில் தெய்வசிந்தனைக்கு உள்ளானது. உலகக் கல்வியின் பின்னால் அலைபவனின் மனம் 'சரஸ்வதி' தேவியினைத் துதிக்கப் பணிக்கப்பெற்றது. வீரத்திற்காக பார்வதியின் அம்சமான காளி முதலான தேவியர் உருவகப்படுத்தப் பெற்றனர். இதன் மூலம், மனிதன் உலக இன்பங்களைத் தேடி ஓடினாலும், அவனை அறியாமலேயே தெய்வ சிந்தனையும் அவனுடைய காரண, காரியங்களில் உட்படுத்தப்பட்டது. இந்த ஒரு காரணத்தினாலேயே இத்தனை தெய்வங்கள், வழிபாட்டு முறைகள்.

ஸனாதன தர்மம், மனித மனங்களின் தனித்துவத்தை மதிக்கிறது. உலகத்தின் முதல் மனித உரிமை கழகம் ஸனாதன தர்மம் எனலாம்.
ஸனாதன் தர்மம், தன்னை அறியாமலேயே ஒரு மனிதனை தன்னை உணரும் உன்னத பாதையில் திருப்புகிறது. ஒரு சமுதாயக் கட்டமைப்பை உருவாக்குகிறது. உலகத்தின் முதல் சட்டமும் இதுவே.

இத்தகைய கட்டமைப்பு தான் ஸனாதன தர்மத்தின் உயிர்நாடி. எத்தனையோ ஆண்டுகளாக நாம் பிறமதத்தினராலும், நாத்திகராலும் ஆளப்பட்டு, நசுக்கப்பட்டும் ஹிந்து மதம் இன்றும் தழைத்தோங்குவதற்க்கு காரணம். நம் வாழ்வியல், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யவேண்டிய சடங்குகள் மூலம் இறைச் சிந்தனை நம்முள் விதைக்கப்படுகிறது.

-- தொடரும்--

Friday, February 29, 2008

புண்ணிய க்ஷேத்ரங்கள் - கைலாசம்

கைலாச பூமியானது ஒவ்வொரு ஹிந்துவாலும் பெரிதும் போற்றப்படும் புண்ணியஸ்தலம். இது பார்வதி பரமேஸ்வரர்களின் வாசஸ்தலமெனக் கூறப்பட்டுள்ளது. 22028 அடி உயரமுள்ள உச்சியையுடைது. மானஸரோவருக்கு 25 மைல் வடக்கேயுள்ளது. இங்கு தான் நம் நாட்டின் பிரதான நதிகளின் உற்பத்தி ஏற்படுகிறது.
கைலாச, மானஸரோவர் யாத்திரையை லிபு கணவாய் மூலம் செய்வார்கள். டோணக்பூர், பிதோராகட், அஸ்கோட், திசூலா, கார்பியாங் வழியாக யாத்திரை போகவேண்டும். கார்பியாங் தான் நமது நாட்டின் எல்லையிலுள்ள ஊர். அதன் பின் லிபு லெக் வழியாக திபேத் நாடு செல்லவேண்டும். வழியில் தக்லகோட் என்னுமிடத்தில் ஒரு புத்த மடம் இருக்கிறது. மானஸரோவர் அருகில் அடுத்தடுத்து இரு ஏரிகள் இருக்கின்றன. மேற்குப் பகுதியிலுள்ள ஏரிக்கு ராகஷஸதால் என்று பெயர். இங்கு நின்று கொண்டுதான் ராவணன் சிவனை ஆராதித்ததாகக் கூறுவர். தேவியின் 51 பீடங்களில் மானஸரோவர் ஒன்று. இங்கு தான் தேவி தாக்ஷாயணியின் வலது உள்ளங்கை விழுந்ததாக கூறப்படுகிறது. மானஸரோவரின் தெளிவான ஸ்படிகம் போன்ற நீரை வேரெங்கும் காண்பதறிது.
கைலாசத்தின் தோற்றமே 16 இதழ்கொண்ட தாமரையின் மேல் வைக்கப்பட்ட சிவலிங்கம் போலுள்ளது. செல்லும் வழியிலுள்ள கௌரிகுண்டம் மிகவும் குளிர்ச்சியான ஏரி. இந்த ஜலம் பார்வதி தேவியினால் ஸ்நானம் செய்யப்பெற்று புனிதத்தன்மை பெற்றுள்ளது. கைலாச பர்வதத்தை ப்ரதக்ஷிணம் செய்வது யாத்ரிகர்களின் கடமை. திபெத்திய புராண நூல்களில் கைலாச பர்வதம் பற்றியும், அங்கு வசிக்கும் சிவ பார்வதி பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஜைனர்கள் அவர்களது முதல் தீர்தங்கரர் இங்குதான் 'நிர்வாணம்' பெற்றதாகக் கூறுவர். கைலாசத்தின் அழகும், வனப்பும் காளிதாஸனால் தான் வர்ணிக்க இயலும். பக்திமான்களும், புண்ணியசாலிகளும் இறந்தபின் இங்கு வசிப்பதாய் ஆஸ்திகர்களின் நம்பிக்கை.

Thursday, February 7, 2008

சாலிக்ராமம் - ஓர் அறிமுகம்

"ஆஜன்மக்ருதம் பாபானாம் ப்ராயச்சித்தம் யயிச்சதி
சாலிக்ராமஷிலாவாஹி பாபஹரி நமோஸ்துதே"

சாலிக்ராமத்தினால் கழுவப்பட்ட தீர்த்தமே - உனக்கு வணக்கம். ஆஜன்ம பரியந்தம் விளைந்த சகல பாபங்களையும் நிவர்த்தித்துக் கொள்ளவிரும்புவோருக்கு நீ சகல பாபங்களையும் போக்குகிறாய் - என்று பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.

வைதீகமான ஹிந்து குடும்பங்களில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டும் வருவது சாலிக்ராமம். இது உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிகப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை பெட்டியில் வைத்திருப்பார்கள். தலைமுறை, தலைமுறையாக வழி, வழியயக குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இதனை பெற்று ஆராதித்து வருகிறார்கள் என்பதே இது எவ்வளவு புனிதமானது, மதிப்பிற்குரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை விளக்கும். இது கன்னிகாதானத்தின் போது, கன்னிகையுடன் வரனுக்கு தானம் செய்யப்படுவதும் உண்டு.

சாலிக்ராமசிலா என்பது விஷ்ணு அம்சம் உடையது. இதன் மந்திரத்திற்கு ரிஷி ஸ்ரீபகவான். தேவதை நாறாயாணன். சாலிக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைகக்கூடிய ஒருவிதமான கல். பவிஷ்யோத்தர புராணம் கூறுவது - கண்டகி நதிக்கு வடக்கிலும் ஹிமாசலத்திற்கு தெற்கிலும் பத்து யோஜனை விஸ்தீர்ணமுள்ள சாலிக்ராமம் என்ற புண்ணிய பூமியுள்ளது. இங்கு துவாரவதி சாலிக்ராமத்தில் ஒன்று கூடுகிறது. மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்தலம் இது என்பதில் சந்தேகமே கிடையாது. முக்திமதி அல்லது முக்திக்ஷேத்ரம் என்று சொல்லப்படுவது காட்மாண்டுவிலிருந்து 140 மைல் தொலைவில் இருக்கிறது. இதையே சாலிக்ராம க்ஷேத்ரம் என்றும் கூறுவர்.
சாலிக்ராமத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:
ப்ரம்மனது வியர்வைத்துளியினின்று கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள். அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர். அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். இது முடியாது என்பதால் தேவர்களை பூமியில் புழுக்காளாகும் படி சபித்தாள். கோபமடைந்த தேவர்கள் அவளை ஒரு ஜடமாக ஆக சபித்தனர். இதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரனையும், ருத்ரனையும் அணுகி அவர்களள பரிஹாரம் கிட்டமுடியாமல், விஷ்ணுவை அண்டினார். இரு சாபங்களையும் அகற்ற இயலாது என்று கூறி விஷ்ணு ஒரு உபாயம் கூறினார். சாலிக்ராம க்ஷேத்ரத்தில் சக்ர தீர்த்தத்தில் தான் வாசம் செய்வது என்றும் அங்கு தேவர்கள் வஜ்ர கீடம் என்ர புழுக்களாகி அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டியது என்றும் கண்டகி என்பவள் ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும் என்றும் ஏற்பாடாகியது. அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியனவே சாலிக்ராம கற்கள்.
சாலிக்ராமங்களில் உள்ளும், வெளியும் கூட சங்கு, சக்ர முத்திரைகள் தெரிவதுண்டு. பல வர்ணங்களுடன் கூடிய அரவத்தின் படம் போல் எல்லாப் பக்கங்களிலும் அடையாளம் தெரியும். சாலிக்ராமம் 'லக்ஷ்மிகாந்தம்' என்றும் அழைக்கப் படும். இது ஒரு ஐஸ்வர்யமாகவே கருதப்படுகிறது. விரும்புவதை கொடுக்கவல்லது. இதேபோல் சக்ரக்குறி உள்ளேயுள்ள சாலிக்ராமத்திற்கும் 'லக்ஷ்மிகாந்தம்' என்றே பெயர். இதுவும் இஷ்டப்ரதமாக உள்ளது. ஸ்ரீக்ருஷ்ணருடைய அடையாலங்களைக் கொண்ட சாலிக்ராமங்களும் உண்டு. ஆமை அடையாளமோ, பசுவின் காலை அடையாலமாக உள்ளவற்றை 'வரஹம்' என்று கூறுவர். சிவப்பு நிறமுள்ள கற்களை 'நரஸிம்ஹ' உருவம் என்று பயப்படுவர். சங்கு முத்ரையுடையது 'வாமன' என்று அழைக்கப்பெறும். நடுவில் சக்ரமுத்திரையுடனும், மிகவும் பெரியதாகவும் இருக்கும் கற்கள் 'தாமோதர' என்று பெயர் பெற்றவை. இதில் மஞ்சள் கிரணங்களும் பெரிய துவாரமும் இருக்கும். குடை போன்று உள்ள சாலிக்ராமம் வைத்திருப்பவன், அரசனாவான். உருண்டை வடிவுள்ளது ஒருவனை தன்வான் ஆக்கும். தட்டையான மூக்கு உடையது கஷ்டத்தையும் வேதனையையும் கொடுக்கும். கூரான நுனியுள்ளது சண்டை வளர்க்கும்.
சாலிக்ராமத்தின் நெற்றிப் பாகம் பாம்பின் படம் போலும், தங்க நிற சக்ரமுடையதானால் அது மிகவும் சிறப்பானது. இதற்கு 'வாமதேவ' என்று பெயர். இடது பக்கம் கருப்பாயும், வலது பக்கம் சிவப்பாயும் உள்ளது, அல்லது மூர்த்தி நீண்ட உதடு உடையது, சிவப்பு உதடுகள், சக்ரத்தை தரித்திருப்பது இவை நன்மை பயப்பவை அல்ல.
இவையெல்லாம் சாலிக்ராமசிலையாக உள்ளவைகளுக்கு பொருந்தும் என அறியவும். பத்ரிநாத்திலுள்ள பிம்பங்கள் சாலிக்ராமத்தினால் ஆனவை. ஆதி சங்கரர் சாலிக்ராம ந்ருஸிம்ஹரை ப்ரதிஷ்டை செய்துள்ளார் பத்ரிநாத்தில். சாலிக்ராமத்தை கோர்த்து மாலையாகவும் பிம்பங்களுக்கு அணிவிக்கலாம். சாலிக்ராம உடைந்திருந்தாலும், ஸ்வரூப அழிவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும், அதற்கு ஒரு தோஷமும் இல்லை. அது குற்றமற்றது.
சாலிக்ராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு பூஜா விவரணங்களோ தேவையில்லை. அது இருந்தாலே சந்துஷ்டியை கொடுக்கவல்லது. சாதாரணமாக புருஷ சூக்த மந்திரத்தால் பூஜிப்பார்கள். அது சிரார்த்த காலங்களில் இருக்க வைப்பது பிதுர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
சாலிக்ராம அபிஷேகதீர்தத்தை சிரஸில் தெளித்துக் கொண்டு அதை அர்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்ண வேணும். இது வைகுண்ட வாசத்தைக் கொடுக்க வல்லது. சாலிக்ராம அபிஷேக ஜலத்தை கீழே கொட்டக்கூடாது.
சாலிக்ராமத்தின் மஹிமை பற்றி சிவபெருமானே பின்வருமாறு கூறுகிறார்:
"எனது லிங்கஸ்வரூபத்தினை கோடிகளில் காண்பதிலும், பூஜிப்பதிலும் உண்டாகும் புண்ணியம், சாலிக்ராமம் ஒன்றைப் பார்த்தாலும், அர்சித்தாலும் ஏற்படும் புண்ணியத்திற்குச் சமம்".

இத்தகைய மஹிமை வாய்ந்த சாலிக்ராமங்களை இல்லம் தோறும் வைத்து, பூஜித்து உலக நன்மையை வேண்டுவோமாக.

Friday, January 25, 2008

குரு - சீடன் - லக்ஷணங்கள்

ஓர் உயர்ந்த குருவானவர் எப்படி இருக்க வேண்டும்; ஒரு சிறந்த சீடனானவன் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்கள் எவை என்பது பற்றி நமது வேதங்களிலும், புராணங்களிலும் எண்ணற்ற விளக்கங்கள் இருக்கின்றன.

குருவின் லக்ஷணங்களைப் பற்றி, வேதாந்த தேசிகர் 'ந்யாச விமசதி:' யில் ஒரு ஸ்லோகத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

"ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமனகம் ச்ரோத்ரியம் ப்ரஹ்ம்நிஷ்டம்
ஸத்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா ஸாதுவ்ருத்த்யா ஸமேதம்
தம்பாஸூயாதிமுக்தம் ஜிதவிஷயகணம் தீர்கபந்தும் தயாலும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேசிகம் பூஷ்ணுரீப்ஸேத் "

நல்ல சம்பிரதாயத்தில் சித்தமுடையவரும், திடமான மனதுடையவரும், பாபமற்றவரும், சாஸ்திரங்களை அறிந்தவரும், ப்ரஹ்மத்தில் ஒன்றியவரும், ஸத்வ குனம் அதிகமாகப் பெற்றுள்ளவரும், உண்மை பேசுபவரும், நல்ல ஆசாரத்துடன் இருப்பவரும், டம்பம், பொறாமை போன்றவைகளில்லாதவரும், வெளிப் பொருட்கள் விஷயமான பற்றை வென்றவரும், எப்போதும் உறவினராக விளங்குபவரும், தயையுடையவரும், தவறுகளைத் திருத்துபவரும், தனக்குச் சேர்ந்தவர்களுக்கும், பிறருக்கும் நன்மையை விரும்புபவருமான குருநாதரை வணங்குகிறேன் - என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு சீடனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களை "ந்யாச விம்சதி:" பின்வருமாறு கூறுகிறது.

"ஸத்புத்தி: ஸாதுஸேவீ ஸமுசிதசரித: தத்த்வபோதாபிலாக்ஷீ
சுச்ரூஷூ: த்யக்தமான: ப்ரணிபதனபர: ப்ரச்னகாலப்ரதீக்ஷ:
சாந்தோ தாந்தோsனஸூய: சரணமுபகத: சாஸ்த்ரவிச்வாஸசாலீ
சிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் க்ருதவிதபிமதம் தத்த்வத: சிக்ஷணீய: "

நல்ல மனதுள்ளவன், மஹான்களுக்குச் சேவை செய்பவன், சரியான நடத்தை உள்ளவன், தத்துவத்தை அறிய ஆர்வமுள்லவன், குருவின் சேவையையே கருத்தில் கொண்டிருப்பவன், அகந்தையற்றவன், குருவை நமஸ்கரிப்பதற்கு ஆர்வமுடனிருப்பவன், கேள்விகளை வினவத் தக்க தருணத்தை எதிர் நோக்குபவன், மனவடக்கம் பொருந்தியவன், புலனடக்கம் வாய்க்கப் பெற்றவன், பகைமையற்றவன், குருவிடம் சரணமடைந்தவன், சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவன் - தகுந்த பரீக்ஷையில் தேறிய நன்றியுள்ள இத்தகைய சீடனுக்கு விருப்பமாயுள்ளதான தத்துவம் கற்றுத்தரப்பட வேண்டும்.

இன்றைய கால குரு, சிஷ்யர்களுக்கும் இந்த லக்ஷணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதி சங்கரர் மட்டுமே கோவிந்தபகவத் பாதரிடம் சீடனாக இருந்த போது இங்கு கூறப்பெற்ற சகல லக்ஷணங்களையும் பெற்றிருந்தார். அவரே லோக குருவாக உயர்ந்த போது, குருவிற்காக கூறப்பெற்ற அனைத்து லக்ஷணங்களையுமே பெற்றிருந்தார். அவர்தம் தாழ் பணிந்து பாரத புண்ணிய பூமியின் மக்களாகிய நாமனைவரும் நலம் பெறுவோமாக!

Wednesday, January 23, 2008

ஆன்மா - ஓர் எளிய அலசல்

பகவத்பாதாள் (ஆதி சங்கரர்) ஆத்மாவைப் பற்றிய அறிவை உண்டாக்குவதற்கு மிகவும் தெளிவாக உபதேசம் கொடுத்துள்ளார். குரு சிஷ்யனுக்கு இடையிலான சம்பாஷணை மூலம் உயர்ந்த தத்துவங்களை எளிதாக விளங்கும்படி விவரித்துள்ளார். ஏகஸ்லோகத்தில்:

"கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்
ஸ்யாதேவம் ரவிதீபதர்சனவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே
சக்ஷுஸ்தஸ்ய நிமீலனாதிஸமயே கிம் தீர்தியோ தர்சனே
கிம் தத்ராஹமதோ பவான் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ"

குரு: "கிம் ஜ்யோதிஸ்தவ" - எந்தப் பிரகாசம் மூலமாக நீ எல்லாப் பொருட்களையும் பார்க்கின்றாய்?

சீடன்: "பானுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்" - பகலில் சூரிய வெளிச்சமிருக்கின்றது. அதன் மூலமாக எல்லாப் பொருட்களையும் நாம் தெரிந்து கொள்கின்றோம். இரவு ஆகிவிட்டால் விளக்கு, சந்திரன் ஆகிய இவற்றின் உதவியால் நமக்குப் பொருட்களைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது.

குரு: "ஸ்யாதேவம் ரவிதீபதர்சனவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே" - சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் எவ்வாறு அறிந்து கொள்கிறாய்? இவற்றைக் காட்டுவதற்கு எந்த ஒளி இருக்கிறது?

சீடன்: "சக்ஷுஸ்தஸ்ய " - கண் மூலமாக. இவைகளைப் பார்க்க வேறொரு ஒளி தேவையில்லை. சூரியனைப் பார்க்க வேறொரு சூரியனோ, சந்திரனைப் பார்க்க வேறொரு பிரகாசமோ தேவையில்லை. பார்க்கத் தேவையானது கண் ஒன்று தான்.

குரு:"நிமீலனாதிஸமயே கிம் தீர்தியோ தர்சனே" - கண்களிரண்டும் மூடிக் கொண்டிருந்தாலும், பலவிதமான காட்சிகளும், அறிவுரைகளும் தெரியத்தானே செய்கின்றன? அவை எந்த ஒளியின் மூலமாக ஏற்படுகிறது?

சீடன்: "தீ:" - அப்போது புத்தியின் மூலமாகத்தான் ஞானம் ஏற்படுகிறது.

குரு: சரி! புத்தியின் மூலமாகத்தான் பலவிதமான பொருட்களை அறிந்து கொள்கிறோம் என்று ஒப்புக் கொள்ளலாம். புத்தி இருக்கிறதென்று தெரிகிறதா?
"கிம் தத்ர" - அதை எதன் மூலம் தெரிந்து கொண்டாய்?

சீடன்: "அஹம்" - நானேதான்.

குரு: "அத: பவான் பரமகம் ஜ்யோதி:" - ஆதலால் எல்லாவற்றிற்கும் பரமப்பிரகாசமானவன் நீதான். அதுதான் ஆத்மா. அந்த ஆத்மாவே கண்ணையும் பார்க்கிறது. சூரிய சந்திரர்களையும் பார்க்கிறது. எல்லாவற்றையும் பார்பது அதுவே. மூலப்பிரகாசம் அதுவே. உன்னுடைய சங்கல்பத்தினால் தான் சந்திரன், தீபம், இந்திரியம், புத்தி இவையனைத்தும் பிரகாசிக்க முடிகிறது. உன்னைக் காட்டிலும் உயர்ந்த பிரகாசம் எதுவுமில்லை.

இவ்விதம் பல எளிய ஸ்லோகங்கள் மூலம் ஆத்ம தத்துவத்தை விளக்கியுள்ளார் ஆதி சங்கரர்.

Sunday, January 20, 2008

ருத்ராக்ஷம் - ஓர் அறிமுகம்

எம்மதஸ்தர்களும் ஜபம் செய்வதற்கு ஏதாவது ஒருவகை ஜபமாலையை உபயோகிக்கிறார்கள். ஹிந்துக்கள் ருத்ராக்ஷத்தையோ, துளஸியையோ, ஸ்படிகத்தையோ பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள்.
'ருத்ராக்ஷ' என்ற சொல்லுக்கு ருத்ரனின் கண்ணீர் என்று பொருள்படும். ருத்ராக்ஷம் என்பது அதே பெயர் கொண்ட மரத்தின் காய் தான். இது நேபாள தேச மலைகளிலும், ஜாவா தீவிலும் அதிகமாக காணப்படுகிறது. இதில் போலிகளும் கிடைக்கின்றன. ருத்ராக்ஷம் மிக புனிதத்தன்மை பெற்றது. ருத்ராக்ஷமும், ஸ்படிகமும் சிவ பக்தர்களாலும், துளஸி வைணவர்களாலும் பெரும்பாலும் அணியப்ப்டுகிறது.

பத்ம புராணம் கூறவது:

"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராகஷத்தை தரிப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்".

ருத்ராக்ஷத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:

க்ருத யுகத்தில் த்ருபுரன் என்ற அசுரன் ப்ரம்மாவிடமிருந்து அநேக வரங்களைப் பெற்று, ப்ராம்மணர்களையும், தேவர்களையும் வெகுவாக இம்சித்து வந்தான். ருத்ரனிடம் முனிவர்களும், தேவர்களும் முறையிட அவர் இவ்வசுரனை சம்ஹரித்தார். இந்த சண்டையில் ருத்ரனது வியர்வைத் துளிகள் பூமியில் விழ, அவை ருத்ராக்ஷ மரங்களாக உண்டாயின.

பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும். ருத்ராக்ஷம் அதனுடைய முகங்களைக் கொண்டு பலவகையாக அறியப்படுகிறது.

(1) ஒரு முக ருத்ராக்ஷம் 'சிவ' என்று அறியப் பெறும். இதை அணிவதால் ப்ரம்மஹத்தி தோஷமும் விலகும். மோக்ஷம் விரும்புவோர் இதை அணிய வேண்டும்.
(2) இரு முக ருத்ராக்ஷம் 'தேவ தேவ' என்று அறியப் பெறும். இது 'அர்த்தநாரீஸ்வரனைக்' குறிக்கும். இது சகல பாபங்களையும் போக்க வல்லது. முக்யமாக பசுஹத்தி தோஷத்தை நிவர்த்திக்கும். ஸ்வர்கப் ப்ரதமமானது.
(3) மூன்று முக ருத்ராக்ஷம் 'அனல' என்று அறியப் பெறும். இது அக்னி தேவனைக் குறிக்கும். இது சஞ்சித பாபங்களை (accumulated sins) போக்கி, சர்வ யஞ்ஞ பலன்களைக் கொடுக்கும். இதை அணிபவர் தைரியமிக்கவர்களாயும், சத்ருக்களால் வெல்ல முடியாதவராயும் ஆவர். அதி நுட்பமான புத்தி உண்டாகும். வயற்று உபாதை உண்டாகாது. தீயினால் பாதை ஏற்படாது. அமங்களங்கள் ஏற்படாது. முடிவில் ஸ்வர்கம் அடைவர்.
(4) நான்கு முக ருத்ராக்ஷம் 'ப்ரும்மா' என்று அறியப் பெறும். இதை அணிபவர் வேத விற்பன்னர்களாயும், தர்ம சாஸ்திர நிபுணர்களாயும், தனவந்தர்களாயும் ஆவதோடு, கொலை செய்த பாபங்களும் அகலப் பெறுவர்.
(5) பஞ்ச முக ருத்ராக்ஷம் 'காலாக்னி' என்று அறியப் பெறும். இது பரமசிவனது ஐந்து முகங்களாகிய "சத்யோஜாதம், வாமதேவ, அகோரம், தத்புருஷம், ஈசான:" என்பனவற்றைக் குறிக்கும். இதை அணிபவர் நிஷேத ஆகாரம் செய்த பாபத்திலிருந்து விடுபடுவர், சிவனுக்கு மிகவும் அடியார்களாவர், ஐஸ்வர்யவானாயும், சந்தோஷமுள்ளவனாயும், இம்மையிலும், மறுமையிலும் சகல போகங்களையும் பெற்று, தேவர்களாலும் வணங்கப் பெறுவர். எல்லா விதங்களிலும் பஞ்சமுக ருத்ராக்ஷம் விசேஷமாக கருதப்படுகிறது.
(6) ஆறுமுக ருத்ராக்ஷம் 'கார்திகேய' என்று அறியப் பெறும். இதை வலது கையில் அணிவதால் ப்ரும்மஹத்தியாதி பாபங்கள் நீங்கும். மிக பராக்ரமசாலியாயும், தோல்வியறியாதவனாயும், சகல நற்பண்புள்ளவனாயும், யௌவனமும், அழகும் பெற்றிருப்பான். அன்னை பராசக்தி அருள் கிடைத்து, பெரியதொரு சதஸிலும் வாக்வன்மையோடு பேசும் திறனும் பெறுவான். மறுமையில் ஸ்வர்கம் பெறுவான்.
(7) ஏழு முக ருத்ராக்ஷம் 'அனந்த' என்று அறியப் பெறும். இது மஹா லக்ஷ்மியைக் குறிக்கும். ஸர்ப்ப ராஜனுக்கு பயத்தைக் கொடுக்கும் இதை அணிபவர்களை சகல விஷங்களினின்றும் காப்பாற்றும். ப்ரும்மஹத்தி, குடி, களவு, கற்பின்மை முதலியனவற்றைப் போக்கும். மூவலக சுகங்களும் ப்ராப்திற்க்கும்.
(8) எட்டு முக ருத்ராக்ஷம் 'வினாயக' என்று அறியப் பெறும். இது விநாயகப் பெருமானைக் குறிக்கும். இதை அணிபவர் எப்பிறவியிலும் மேதா விலாசத்தோடு விளங்குவர். வாழ்வில் தோல்வியின்றி, பெரிய எழுத்தாளனாகவும், சைத்ரீகனாகவும், நிர்வாகத்திறமை பெற்றவனாகவும், நீண்ட ஆயுள் வாழ்ந்து ஸ்வர்க்கப் பதவியினைப் பெறுவான்.
(9) ஒன்பது முக ருத்ராக்ஷம் 'பைரவ' என்று அறியப் பெறும். இது துர்கா (சக்தி) தேவியைக் குறிக்கும். இதை கைகளில் அணிபவர் சகல பாபங்களும் கரைக்கப்பெற்று, சிவசாயுஜ்யம் பெறுவர். இந்திரனுக்கு நிகராக வணங்கப் பெறுவர்.
(10) பத்துமுக ருத்ராக்ஷம் 'தச முக' என்று அறியப் பெறும். ருத்ராக்ஷத்தின் சக்தி மஹத்தானது. இது மஹாவிஷ்ணுவினைக் குறிக்கும். இதை கண்ட மாத்திரத்தில் சர்பங்களும் நாசமடையும். இதை அணிபர் மட்டுமின்றி அவரது சந்ததியினரும் இதனால் காக்கப் பெறுவர்.
(11) பதினோரு முக ருத்ராக்ஷத்தை சிரஸில் அணிய வேண்டும். இது அஞ்சனேயனைக் குறிக்கும். ஆயிரம் அஸ்வமேத பலனையும், ச்ரோத்ரியர்களுக்கு ஆயிரம் கோதானம் செய்த பலனையும் கொடுக்கும். மறு பிறவியற்று ஹரனுடன் ஒன்றாய் கலந்துவிடுவர்.
(12) பனிரெண்டு முக ருத்ராக்ஷம் கழுத்தில் அணிய வேண்டியது. சூரிய பகவானுக்கு திருப்தியை உண்டுபண்ணும். பல யாக, யஞ்ஞ பலன்களைக் கொடுப்பதோடு, இடி, மின்னல் முதலிய பயங்கள் ஏற்படாது. அக்னி உபாதையோ, வியாதியோ அணுகாது. ஏழ்மை ஏற்படாது. ப்ராணி வதை பாபங்கள் போகும்.
(13) பதின்மூன்று முக ருத்ராக்ஷம் 'ருத்ர' என்று அறியப் பெறும். இதை அணிபவர் சகல இஷ்டங்களையும் பெறுவர். இது க்ருஹத்திலிருந்தாலே நிதியாக விளங்கும். இது இந்திரனைக் குறிக்கும். செயற்கறிய செய்கை செய்யும் ஆற்றல் ஏற்படும். ஸ்வபந்து ஹத்தி தோஷத்தைப் போக்கி ஸ்வர்கப் ப்ரதமமாய் இருக்கும்.
(14) பதினான்கு முக ருத்ராக்ஷம் 'தேவ மணி' என்று அறியப் பெறும். சிரஸிலோ, கையிலோ அணியலாம். இது சிவ பெருமானைக் குறிக்கிறது. இதை அணிபவர் தேவர்களாலும் பூஜிக்கப் பெறுவர். இது பேய், பிசாசு இன்ன பிற தீய சக்திகளிலிருந்து காக்கும். சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும்.

ருத்ராக்ஷம் அணியும் போது அததற்குண்டான மந்திரங்களைச் சொல்லியே அணியவேண்டும்.

ஒரு முகம் -"ஓம் ருத்ர ஏகவக்த்ரஸ்ய"
இரு முகம் -"ஓம் கம் த்விவக்த்ரஸ்ய"
மூன்று முகம் -"ஓம் வம் த்ரிவக்த்ரஸ்ய""
நான்கு முகம் -" ஓம் ஹ்லீம் சதுர்வக்த்ரஸ்ய"
ஐந்து முகம் -"ஓம் ஹ்லாம் பஞ்சவக்த்ரஸ்ய"
ஆறு முகம் -"ஓம் ஹ்லூம் ஷட்வக்த்ரஸ்ய"
ஏழு முகம் - "ஓம் ஹ்ல: சப்தவக்த்ரஸ்ய"
எட்டு முகம் -"ஓம் கம் அஷ்டவக்த்ரஸ்ய"
ஒன்பது முகம் -"ஓம் ஜூம் நவவக்த்ரஸ்ய"

பத்து முகம் -"ஓம் க்ஷம் தசவக்த்ரஸ்ய"
பதினொரு முகம் -"ஓம் ஸ்ரீம் ஏகாதசவக்த்ரஸ்ய"
பனிரெண்டு முகம் -"ஓம் ஹ்ராம் த்வாதசவக்த்ரஸ்ய"
பதிமூன்று முகம் -"ஓம் க்ஷௌம் த்ரயோதசவக்த்ரஸ்ய"
பதினான்கு முகம் -"ஓம் வாம் சதுர்தசவக்த்ரஸ்ய"


தற்காலத்தில் வேறு சில மந்திரங்களும் உபயோகத்தில் உள்ளன.

ஒரு முகம் -"ஓம் நம: சிவாய ஓம் ஹ்ரீம் நம:"
இரு முகம் -"ஓம் நம: ஓம் சிவ சக்திஹி நம:"
மூன்று முகம் -"ஓம் க்லீம் நம:"
நான்கு முகம் -" ஓம் ஹ்ரீம் நம:"
ஐந்து முகம் -"ஓம் ஹ்ரீம் நம:"
ஆறு முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம:"
ஏழு முகம் - "ஓம் ஹம் நம:"
எட்டு முகம் -"ஓம் ஹம் நம: ஓம் கணேசாய நம:"
ஒன்பது முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம: ஓம் நவதுர்கையை நம:"
பத்து முகம் -"ஓம் ஹ்ரீம் நம: ஓம் ஸ்ரீ நாராயணாய நம:"
பதினொரு முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம: ஓம் ஸ்ரீருத்ராய நம:"
பனிரெண்டு முகம் -"ஓம் க்ரௌம் ஸ்ரௌம் ரௌம் நம:"
பதிமூன்று முகம் -"ஓம் ஹ்ரீம் நம:"
பதினான்கு முகம் -"ஓம் நம: ஓம் சிவாய நம:"

ருத்ராக்ஷ மாலையில் ஒழுங்கான, குற்றமற்ற ருத்ராக்ஷங்களைக் கோர்க்க வேண்டும். முகங்கள் சரியானபடியும், உடையாமலும், பூச்சி அரிக்காமலும், கோணல் மாணலிலாமலும் இருக்க வேண்டும். மாலையில் 'ப்ரும்மக்ருந்தி' என்று சொல்லப்படும் நடுநாயகமாக ஒரு தொங்கட்டம் இருக்க வேண்டும். ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.

புண்ணிய நதிகள் - ஸரஸ்வதி

புஷ்கரம் என்னும் ஏரியிலிருந்து உற்பத்தியாகி லூனி என்னும் நதியுடன் கலக்கிறது. ஹிமாலயத்தில் சிவாலிக்கில் உற்பத்தியான ஸரஸ்வதி நதி விநாசன என்ற இடத்தில் மறைந்து மீண்டும் புஷ்கரத்தில் உண்டாவதாகக் கூறப்பட்டுள்ளது. ஸரஸ்வதி நதிதான் படாபாக்னியை மேற்கு சமுத்திரத்திற்கு தூக்கி சுமந்ததாகச் சொல்லப்படுகிறது.
ரிக்வேதத்தில் இந்த நதி பலவாறு வர்ணிக்கபட்டுள்ளது. ரிக் வேதத்தின் 'நாடிஸ் ஸ்துதி ஸூக்தம்' (6.61,7.95 மற்றும் 7.96) இந்நதியை மேற்கே சட்லஜ் நதிக்கும், கிழக்கில் யமுனை நதிக்கும் நடுவில் அந்தர்வாகினியாகச் செல்கிறதாகக் கூறுகிறது. ரிக்வேதத்தில் ஸரஸ்வதி நதி ஏறக்குறைய 72 இடங்களில் கூறப்படுகிறது. 'ஸப்த சிந்து' என்று அறியப்படும் ரிக்வேத கால ஏழு நதிகளில் ஸரஸ்வதி தலையான நதியாக அறியப் பெற்றுள்ளது. பிற்கால வேதநூல்களாகிய 'தான்ட்யா', 'ஜைமின்னியா' மற்றும் மஹாபாரதம் இந்நதி பாலைவனத்தில் மறைந்ததாகக் கூறுகின்றன. ப்ரயாக் (அஹமதாபாத்) நகரில் ஸரஸ்வதி அந்தர்வாகினியாகிய கங்கை, யமுனையுடன் கலக்கிறது. இது 'த்ரிவேணி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது.

Friday, January 11, 2008

புண்ணிய நதிகள் - ப்ரஹ்ம்மபுத்ரா

இதிஹாஸங்களிலும், புராணங்களிலும், பழைய நூல்களிலும் 'ப்ரஹ்ம்மபுத்ரா' நதியை 'லௌஹித்யா' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவும் சோனா நதியினைப் போல் 'நதம்' தான் (ஆண்பால்). அஸ்ஸாம் ராஜ்ஜியத்தின் கண் பாயும் இந்நதியை அஸ்ஸாமிய பாஷையில் லோஹித் என்றும் கூறுவர்.

திபெத்தின் மேற்கு பகுதியான மானஸரோவர் ஏரியில் உற்பத்தியாகிறது. சந்தனு என்ற ஒரு ரிஷிக்கு அமோகா என்கிறவள் பத்தினி - ப்ரம்மனது அருளால் ஒரு மகவைப் பெற்றாள். சந்தனு இக்குழந்தையை கைலாசம், கந்தமாதனம், ஜருதி, சம்பகம் என்னும் மலைகளுக்கு நடுவில் வைத்தார். இக்குழந்தை ஒரு ஜல மயமான உருவைப் பெற்றது. பரசுராமர் தனது தாயாரை கொன்ற பாபம் நீங்க இங்கு வந்து தனது கோடரியால் இந்த ப்ரம்ம குண்டத்தை வெட்டி அதனின்று ப்ரஹ்ம்மபுத்ரா நதியாகப் பாயும்படிச் செய்தார்.

கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் ஒன்று சேர்ந்து வரும் நதியில் ப்ரஹ்ம்மபுத்ராவும் கலக்கிறது. இது மிகவும் பாவமான தீர்த்தம். ப்ரஹ்ம்மபுத்ரர நதிக்கரையில் நீலாசல குன்றில் காமக்யா தேவியின் ப்ரசித்தி பெற்ற ஆலயம் கௌஹாத்தி நகருக்கு இரண்டு மைல் தூரத்திலுள்ளது. இது ஒரு முக்கியமான சக்தி பீடம். தாக்ஷாயணியாகிய பார்வதி மாதாவின் தேகத்திலிருந்து யோனி இவ்விடம் விழுந்ததால், இது புண்ணிய பூமியாகி, இங்கு பிறவி, மறுபிறவியிலிருந்து விலக்கக் கூடிய சக்தியைப் பெற்றதாக யோகினி தந்த்ரம் கூறுகிறது.

பஸ்மகூடம் (மன்மதனை சிவபெருமான் எரித்த் இடம்), ஊர்வஸி கூடம் (ஊர்வஸி காமக்யாதேவிக்கு ஸ்வர்கத்திலிருந்து அம்ருதம் கொண்டுவந்த இடம்) இங்கு அமையப் பெற்றுள்ளது. இங்கு மாக மாதம், சுக்ல பக்ஷ த்வவதசியில் ஸ்நானம் செய்வதால் அஸ்வமேத யாக பலன் உண்டாகும். மணிகர்ணிகேஸ்வரர் ஆலயம், அச்வக்ராந்தம் (க்ருஷ்ண பரமாத்மா நரகாசுர வதத்தின் போது தன் பரிவாரங்களுடன் தங்கிய இடம்), இவை ப்ரஹ்ம்மபுத்ரர நதியின் கரையில் அமைந்த புண்ணிய க்ஷேத்ரங்கள். அஸ்வக்ராந்தத்திற்கு தெற்கேயுள்ள அஸ்வி தீர்த்தம், விஷ்ணுவினுடைய கல்கி அவதார க்ஷேத்ரம் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 9, 2008

புண்ணிய நதிகள் - சோனா நதி

வட இந்தியாவில் அமரகண்டகம் என்கிறபடி பூமியில் உற்பத்தியாகும் சோனா நதி கங்கை நதிக்கு ஒரு முக்கிய உபநதி. இங்கேயே தான் நர்மதா நதியும் உற்பத்தியாகிறது. அமரகண்டகம் ஒரு புண்யஸ்தலம். ச்ரார்தம் செய்ய வேண்டிய இடமும் கூட. சோனா நதி பாட்னா அருகே கங்கையை சேருகிறது. சரயு நதியும், சோனா நதியும் எதிரெதிராக கங்கையில் கலக்கின்றன. இந்த நதியை சோணபத்ரா என்றும் கூறுவர். இது நதம் (masculine gender) என்றும் கூறப்படுகிறது. இக்கரையில் சந்தியா உபாஸனை செய்தல் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் போக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. பிரம்மனது இரு கண்ணீர் துளிகள் நர்மதையாகவும், சோனா நதியாகவும் அமரகண்ட மலையிலிருந்து உற்பத்தியாயின என்பது கூறப்பட்டுள்ளது.

ராம, லக்ஷ்மணர்களை விஸ்வாமித்ர முனிவர் இந்த நதியை கடந்ததாய் ராமாயணம் கூறும். புண்ணிய நதியான சோனா நதியின் இன்னோரு பெயர் 'சுமகதி'. இந்த காரணத்தால் இந்நதி பாயும் இப்பிரதேசம் 'மகதம்' என்றும் அறியப் பெறும். பிற்கால பிரபல மகத சாம்ராஜ்ஜியம் இந்நதியினைச் சுற்றியே ஸ்தாபிக்கப் பெற்றது. இந்நதி கிழக்கிலிருந்து, மேற்காக இங்கிருக்கும் மலைகளுக்கு ஒரு மல்லிகை மாலையைப் சூட்டியது போல ஓடுகிறது.

Saturday, January 5, 2008

புண்ணிய நதிகள் - துங்கபத்ரா

'துங்கா' மற்றும் 'பத்ரா' என்ற இரு நதிகளின் சேர்கையால் துங்கபத்ரா என்ற நதி உருவாகியுள்ளது. இது ஆந்திர மாநிலத்தின் ஜீவ நதியாகிய கிருஷ்ணா நதியின் மிக முக்கியமான உப நதி. மைசூர் ராஜ்ஜியத்தில், ஷிமோகா எனும் நகருக்கு ஒன்பது மைல்களுக்கு அப்பால் கூடலி எனும் ஊரில் இவ்விரு நதிகளும் ஒன்றிணைகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையில், 'கங்க மூலா' எனுமிடத்தில் உற்பத்தியாகிறது. புராணங்களின் படி இந்த மலைக்கு 'வராஹ பர்வதம்' என்று பெயர். மஹா விஷ்ணு வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை சம்ஹாரத்த போது, ஸ்வாமியின் இடக் கொம்பிலிருந்து வடிந்த வியர்வை துங்கா நதியாகவும் (துங்கா என்றால் கொம்பு - உயர்ந்த கொம்பு என்பது பொருள்), பலமாயும், உறுதியாயுமிருந்த வலது கொம்பிலிருந்து (பத்ர) வடிந்த வியர்வை பத்ரா நதியாகவும் புனித நதிகளாயின என்பது பெரியோர் வாக்கு.

ஆதி சங்கர பகவத் பாதாளால் ஸ்தாபிக்கப் பெற்ற ச்ருங்கேரி சாரதா பீடம் துங்கபத்ரா நதியின் இடக்கரையில் அமைந்துள்ளது. இயல்பான விரோதிகளான கர்பமாயிருந்த தவளை ஒன்றிற்கு நாகம் குடைபிடித்த அதிசயம் நடந்த இந்த புண்ணிய பூமியை ஆதி சங்கரர் ஸ்வீகரித்ததில் ஆச்சரியமென்ன?

விஜயநகர, ஹம்பி சாம்ராஜ்ஜியம் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றளவும், இயற்கை எழில், புராதானச் சின்னங்கள், தெய்விகம் என அனைத்து குணங்களையும் ஒருங்கே அமையப் பெற்ற துங்கபத்ரா ஜீவநதியாகவே திகழ்கிறது.

ஸ்ரீ மஹாகணபதி ஸஹாயம்

"கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தவம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந ச் ச் ருண்வன்னூதி பிஸ்ஸீத ஸாதனம்"

"அனைத்து மந்திரங்களின் தலைவா! அனைத்து தேவதைகளின் கூட்டமைப்பாகிய கணங்களின் தலைவா! ஞானமே வடிவமான உன்னைப் பாடி வணங்குகின்றேன். இதோ எனக்கு முன்பாக நான் அமைத்து வைத்துள்ள உங்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு நான் ஆற்றுகின்ற இந்த உபாஸனையைத் தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்."

இந்த பாரத கண்டத்தில் ஜனிப்பவன் பாக்கியசாலி. பரந்து கிடக்கும் இப் புண்ணிய பூமியில் பிறக்க தேவர்களும் தவமிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இது கர்ம பூமியாகவும் திகழ்கிறது. பல நற்செயல்களைப் புரிவதன் மூலம் ஆத்ம சுத்தியும், சித்த சுத்தியும் ஏற்பட்டு, பரமார்த்திக பேரறிவைப் பெற்று மானிடர் பிறப்பு, இறப்பு இல்லா முக்தி நிலையை அடைய இப் புண்ணிய பூமியின்கண் பற்பல புனித க்ஷேத்திரங்களும், பாவனமான தீர்த்தங்களும் நிறைந்துள்ளன. நமது வைதிக மார்க்கத்தில் (ஹிந்து மதம் என்று நவீனர்களால் கூறப்படுகிறது), க்ஷேத்ராடன மஹிமையும், புண்யதீர்த்த ஸ்நான விசேஷங்களும் மிகவும் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன.

ஒரு மனிதனின் மனதிலும், அவனுடைய எண்ணங்களிலும், செய்கைகளிலும் அவன் இருக்கும் சூழ்நிலை ஒரு பக்குவத்தை உண்டு பண்ணுகிறது. அவன் வசிக்கும் இடத்தைப் பொருத்து ஒரு மனிதனுடைய செய்கைகள் உருவாகின்றன. ஆகவே இடங்களுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்படுகிறது. புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்கும் ஸ்தலங்கள் யாது காரணத்தாலோ புனிதத் தன்மை பெற்று இருக்கின்றன. அந்த ஸ்தலங்களுக்கு விஜயம் செய்வதால் அங்கு இருக்கும் புனிதத் தன்மையை நாம் பெறவும் முடிகிறது.

நமது தேசத்திலுள்ள ஒவ்வொரு புண்ணிய ஸ்தலமும் எப்படி புனிதத்துவம் வாய்க்கப் பெற்றது என்பதை அந்தந்த ஸ்தல புராணங்கள் விளக்கும். பொதுவாக தெயவ அவதார விசேஷத்தாலும், தபோநிஷ்டர்களான மஹரிஷிகள் வசித்து வந்ததாலும், ஸமய குருமார்கள், ஆண்டவனின் அடியார்களாகிய பக்தர்கள் பாதம் பட்டமையாலும், அவர்களால் பாடப்பெற்று போற்றப்படுவதாலும் அந்தந்த ஸ்தலங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதே போல் தீர்த்தங்களும் புனிதமானவையாக விளங்குகின்றன. ஜலம் ஸர்வ தேவ வடிவமானது, ப்ராண மயமானது, அருமருந்தானது என வேத வாக்யங்கள் உத்கோஷிக்கின்றன. இந்த ப்ரபஞ்சமே 'ஆப:' எனப்படும் நீர் மூலமாகவே தோன்றியது. நமது வாழ்விற்கு ஜீவாதாரமாக அமைந்திருப்பது தீர்த்தம் தான். அதிலும் புண்ணிய தீர்த்தங்கள் என தேவ, ரிஷிக்கள் மூலமாய் தோன்றியும், புனிதத் தன்மையை அடைந்தனவையாகுமான நதிகளில் தீர்தாடனம் செய்வதும் நம் பாபம் விலக நம் தர்ம சாஸ்திர நூல்களால் விதிக்கப் பட்டிருக்கின்றன.

அத்தகைய க்ஷேத்ரங்களை தரிசித்து, அங்கு எழுந்தருளியுள்ள மூர்த்திகளை ஆராதித்தும், புனித நீராடுதலையும் ஸனாதன தர்மம் வாழும் ஒவ்வொருவரும், தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் செய்து முடிக்க ஆசை கொள்வான். இத்தகைய புண்ய காரியங்களில் ஈடுபடவும், நிறைவேற்றவும் ஜன்மாந்தர புண்ணிய வசத்தால் தான் முடியும் என்பது சான்றோர் வாக்கு. அந்த பாக்கியம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க பரமனைப் ப்ரார்த்திப்போம்.