Showing posts with label அத்வைதம். Show all posts
Showing posts with label அத்வைதம். Show all posts

Thursday, July 10, 2008

சுப்ரமண்யன்/முருகன் திருவுருவம் - ஒரு புரிதல்



முருக கடவுள், முழுமுதற்கடவுளான விநாயகரின் இளையர், சிவ பார்வதியரின் இரண்டாவது புதல்வர். அழகின் இலக்கணமாகிய இவர் கார்திகை நக்ஷத்ரத்தில் உதித்ததால் கார்திகேயன் என்றும், ஆறுமுகங்களைக் கொண்டதால் ஷண்முகன் என்றும் அன்போடு போற்றப்படுபவர். மற்ற தெய்வங்களைப் போலவே முருகனின் உருவமும், முழுமையான தத்துவத்தை உணர்த்துகிறது.




சாதாரண மாக்களாகிய நாம் அனைவருமே 'ஜாக்ரத்' எனும் விழிப்பு, 'ஸ்வப்ன' எனும் கனவு, 'ஸுஷுப்தி' எனும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளிலேயே உழல்கிறோம். இவை மூன்றையும் கடந்த உயரிய நான்காவது நிலையே 'துரிய' எனப்படும் 'தெய்வநிலை'. இந்த நிலையினை தம் வாழ்நாளிலேயே அனுபவிப்பர் இன்று யாருமில்லை. ஆதி சங்கரர் போன்ற மஹா புருஷர்கள் இத்தகைய தெய்வநிலையினை அனுபவித்தவர்கள். ஆனால் இதுவே ஹிந்து தர்மம் போதிக்கும், மனிதனின் உண்மையான, அடிமுடிவற்ற ஸ்வரூபம். இந்த துரிய நிலையினையே முருகனின் திருவுருவம் உணர்த்துகிறது.




முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார். பெரும்பாலான ஹிந்து மத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை. வாஸனைகளும், அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூல காரணம். இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணர முதல் தடை. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான். வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான். முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல், இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்.



முருகனின் வாகனம் மயில். மயிலானது தன்னுடைய அழகிய தோற்றத்தில் மற்றவரின் மதி மயங்கச்செய்யவல்லது. தன்னுடைய தோகை விரித்து ஆடி, அவ்வழகின் மூலம் ஒருவனை மோகம் கொள்ளச்செய்யவல்லது. மனிதன் தன்னுடைய உடல் அழகு, புத்திசாலித்தனம், மற்றும் அலைபாயும் மனது ஆகியவற்றின் மீதே மோகம் கொண்டுள்ளான் என்பதை மயில் உணர்த்துகிறது. அவன் தன்னைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியும், புரியும் விடயங்களையே சிந்தித்து தன்னை ஒரு மனித எல்கைக்குள் அடைத்துக் கொள்கிறான். மயிலின் கழுத்தின் உண்மையான நிறம் நீலம். நீல நிறம் 'எல்லையற்ற' தன்மையை உருவகப் படுத்துகிறது. எப்படி மயில் தோகை விரித்து ஆடுகையில், நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி, உண்மையான நீல நிறம் புலப்படுவதில்லையோ, அதே போல் மனிதன் புற அழகினில் மயங்கி, எல்லையற்றதாகிய, தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணர முடிவதில்லை. தன்னுடைய உடல், மன, புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீல நிறமாகிய மயில் மேல் முருகன் செல்வதைப் போல தன் கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம்.



முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். நாகம் கொல்லப்படுவதில்லை ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் உணர்ந்துவது ஒருவனுடைய 'அகந்தை'. நாகத்தின் விஷம் நாகத்தினை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம். அதே போல் ஒருவனுடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை. ஆனால் அதையே வெளிக்காட்டினால், அதனால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்ட விளைவுகள் ஏற்படும். ஆகவே விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.


முருகனின் மற்றொரு உருவம், ஷண்முகன் எனப்படும் ஆறுமுகம். இறைவன் பஞ்ச பூதங்கள் (அல்லது ஐந்து புரிதல் உறுப்புகள் (five sense organs)) மற்றும் ஒரு மனதின் வாயிலாக காட்சியளிக்கிறான். உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு எந்தவிதமான் உருவகப்படுத்துதலும் கிடையாது. மனமானது ஐந்து புரிதல் உறுப்புக்கள் மூலம் தன்னை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகிறது. அதனை அடக்கியாள்பவனே தன்னில் இறைவனை உணர்வான்.


இத்தகைய மேலான முருகனின் திருவுருவம் உணர்த்தும் தத்துவதினை உணர்ந்து அவன் பாதம் பணிந்து நாம் உண்மையினை உணர்வோமாக!

Friday, March 14, 2008

விநாயகர் - முழு முதற் கடவுள்



விக்னேஸ்வரர் - விக்னங்களை (தடைகளை) நீக்குபவர் நமது ஹிந்து தேசத்தில் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவர். நம் புராணங்களில் விநாயகர் யானை தலையும், மனித உடலும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு தந்தம் பாதி உடைந்ததாயும், பெரிய வயிற்றை உடையவராயும், ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காலடியில் பலவகையான உணவு வகைகள் பரப்பப்பட்டிருக்கும். ஒரு சுண்டெலி(மூஞ்சூறு) உணவின் இடையில் அவரை வேண்டி அமர்ந்திருக்கும். அவரது உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது.


ஆன்மிக கல்வியின் முதல் படி 'ச்ரவணம்' எனப்பெறும் வேதாந்த உண்மைகளைக் கேட்டல். இரண்டாவது படி, 'மனனம்' எனப்பெறும் கேட்ட வேதாந்த உண்மைகளின் சுய புரிதல்/தெளிதல். விநாயகரின் பெரிய காதுகள் மற்றும் பெரிய தலை அவரது ச்ரவணம் மற்றும் மனனம் குணங்களைக் குறிக்கின்றன.


அவரது முகத்திலிருந்து வெளிப்படும் துதிக்கை அறிவையும், அறிவால் வெளிப்படும் பகுத்தறியும் (திராவிட பகுத்தறிவு அல்ல) திறனையும் குறிக்கும். மனிதனின் அறிவு நமது வேதாந்தங்களின்படி இரு வகைப்படும் - பொது (புற) அறிவு மற்றும் உள் (அக) அறிவு. உலகப் பொருட்களின் எதிர்மறை வித்தியாசத்தை உணர்த்துவது பொது பகுத்தறிவு - எ.கா., இரவு-பகல், கருப்பு-வெள்ளை, சந்தோஷம்-வருத்தம் முதலியவற்றைப் பற்றிய அறிவு. உள் பகுத்தறிவு என்பது நிலையான உண்மை-மாயை, முடிவுள்ளது-முடிவற்றது, புறஉலகம் (terrestrial) (கண்ணுக்குத் தெரிவது) -ஆன்மிகஉலகம் (Transcendental - கண்ணுக்கு தெரியாதது) போன்ற உயரிய சிந்தனைகளப் பற்றிய அறிவாகும். விநாயகரின் துதிக்கை இந்த தத்துவத்தைக் குறிக்கும். யானைகளின் துதிக்கை மற்ற எல்லா உறுப்புகளைவிட சிறப்பானது. துதிக்கையினால் தரையில் இருக்கும் ஒரு குண்டுசியையும் எடுக்கமுடியும், மற்றும் பெரிய மரத்தையும் வேரோடு எடுக்க முடியும். இதைப்போன்ற எதிர் மறை செயல்கள் புரியக்கூடிய ஒரு கருவி இருப்பதரிது. விநாயகர் பெரிய மரம் போன்ற புற உலக அறிவையும், கண்ணுக்குப் புலப்படாத சிறிய ஊசி போன்ற அக அறிவையும் ஒருங்கே உணர்ந்தரிந்தவர் என்பதையே அவரது துதிக்கை குறிக்கிறது.


மனித பூரணத்துவம் உயர்ந்த தத்துவ அறிவைப் பெறுவதனாலேயே சாத்தியம். பூரணத்துவம் பெற்ற மனிதன் உலக எதிர்மறைகளால் பாதிக்கப்படுவதில்லை. சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, குளிர்ச்சி-வெப்பம், மதிப்பு-அவமரியாதை போன்ற புற உலக எதிர்மறைகள் அவனை பாதிப்பதில்லை. சாதாரண மனிதன் உலகத்தின் இத்தகைய எதிர்மறைகளுக்கிடையே அல்லாடிக்கொண்டிருக்கிறான். இந்த விஷயத்தையே விநாயகரின் இரு தந்தங்களும் உருவகப் படுத்துகின்றன. அவற்றில் ஒன்று உடைந்திருப்பது உலக எதிர்மறைகளை உடைத்தெரியத் தயங்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்கே. புற உலகில் தந்தங்கள் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் உண்மையான அறிவு ஏற்பட இந்த உலக பொருட்களைப் பற்றிய பற்றுதலை (அதுவும் நாமே) உடைத்தெறிய வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்கே ஒரு தந்தத்தை தானே உடைத்து கையில் வைத்திருப்பதாக விநாயகர் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்.


விநாயகருடைய பெரிய பானை வயிறு குறிப்பது யாதெனில் பூரணத்துவம் பெற்ற மனிதன் எத்தகைய விஷயத்தையும், அனுபவத்தையும் உட்கொண்டு சீரணித்த பின்னும், நிலையான சிந்தனையுடன் இருக்க முடியும் என்பதையே. எத்தகைய சோதனைகளையும், பிறப்பு-இறப்பு அனுபவங்களையும் ஒருவனால் ஒரே மாதிரி சீரணிக்கமுடியவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உருவகப்படுத்துவது விநாயகரின் பானை வயிறு.


குபேரன் ஒருமுறை ஒரு பிரம்மாண்டமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். விநாயகப் பெருமான், விருந்திற்குப் படைக்கப் பெற்ற அனைத்து உணவுப் பண்டங்களையும் உண்டு விட்டு பசியடங்காமல் தவித்தார். சிவபெருமான் தோன்றி ஒரு கையளவு வருத்த அரிசியை வழங்கினார் - அதனை உண்டவுடன் விநாயகரின் பசியாறியது. இந்தக் கதை விளக்கும் தத்துவம் - மனிதன் குபேர சம்பத்துகளால் ஒருபோதும் திருப்தி அடைய இயலாது. பொருட்களின் பின்னால் உள்ள ஆசை ஒரு போதும் திருப்தியையோ, அமைதியையோ தரவியலாது. உண்மையான தத்துவத்தினை அறிய ஒரே வழி 'வாஸனை' எனப்படு தன் ஆசைகளை ஒருவன் கொன்று தின்பதே. அரிசி வருக்கப்படும் போது தன்னுடைய 'உயிர்த்' தன்மையை இழக்கிறது. அதனால் மறுபடியும் முளைவிட இயலாது. ஆசைகளைக் கொல்வதே வருத்த அரிசியின் உட்கொண்டதன் மூலம் உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. விநாயகரது இடக்கையிலிருக்கும் வருத்த அரிசி உணர்த்தும் தத்துவம் இதுவே.


விநாயகர் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை பூமியில் பதித்தும் அமர்ந்த நிலையில் காண்பிக்கப்படுகிறார். இது ஒரு மனிதன் பூமியிலிருக்கும் போது மற்றெந்த மனிதனைப் போல் வாழ்வதையும், அவனுடைய மனம் மட்டுமே உள் திரும்பி ஆத்மாவில் லயித்திருப்பதையும் காண்பிக்கிறது.


விநாயகரின் காலடியில் பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவு வகைகள் உலக இன்பங்களையும், செல்வத்தினையும் குறிக்கிறது. மேற்கூரிய வகைககளில் வாழும் ஒருவனின் காலடியில் உலக செல்வங்களனைத்தும் குவிந்து கொடுக்கும் என்னும் தத்துவத்தினை உணர்த்துவது இது. அவனுக்கு இச்செல்வங்கள் ஒரு பொருட்டேயில்லையெனினும், அவை அனைத்தும் அவன் காலடியில் அடிமையாகக் கிடக்கும்.


உணவுப் பண்டங்களுக்கிடையே ஒரு மூஞ்சூறு உணவினைத் தொடாமல் விநாயரின் அனுமதி வேண்டி நின்றிருக்கும். மூஞ்சூறு (எலி) ஆசைகளை உருவகப்படுத்துகிறது. எலிக்கு சிறிய வாய் மற்றும் கூரிய பற்கள் உண்டு. ஆனால் எலி மிகுந்த பேராசை கொண்டது. அதனுடைய ஆசை எவ்வளவு பெரியது என்றால் எப்போதுமே தனது தேவைக்கு மேலேயே உணவினைச் சேர்த்து வைக்கும் - பலமுறை எந்த இடத்தினில் சேர்த்தோம் என்ற அறிவின்றி பல வளைகளிலும் உணவினைச் சேர்த்து வைக்கும். எலிகள் பேராசையின் மொத்த உருவம். இத்தகைய குணம் உள்ள எலி பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவுப் பொருட்களின் மத்தியிலிருந்தும், அவற்றினைத் தொடாமல் விநாயகரின் அனுமதி வேண்டி அமர்ந்திருக்கிறது. இது உணர்த்துவது யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன் ஆசைகளின் மேல் முழுமையான் ஆளுமை உடையவனாக இருப்பான். உலகச் சபலங்கள் அவனை எதுவும் செய்ய முடியாது. இத்தகையவனுடைய செயல் பாடுகள், அவனுடைய தெளிந்த சிந்தனையின் பால் நடக்குமே தவிர, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படமாட்டா.


ஒரு புராணக் கதையின் படி சந்திரன் ஒருமுறை பெருத்த உருவமுடைய விநாயகர், சிறிய மூஞ்சூறுவின் மீது பயணம் செய்ததைப் பார்த்து சிரித்தது. இந்த குற்றத்தினால் விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பது தவறு என்பது ஹிந்து மக்களின் ஒரு நம்பிக்கை. விநாயகர், மூஞ்சுறுவின் மேல் சவாரி செய்வதன் உள் அர்த்தம் யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன்னுடைய உடல், உலக அறிவு, மற்றும் மனதின் மூலம் அறியமுடியா பேருண்மையை உணர்த்த முயற்சிப்பதுவே. உடல், மனம் மற்றும் உலக அறிவு என்பவை முடிவுள்ளவை. இவற்றின் மூலம் 'ஆன்மா' வின் பேருண்மையை விளக்க இயலாது. சந்திரன் மனதின் கடவுள். சாதாரண மனம் கொண்ட மனிதனால் பேருண்மையினை உணர முடிவதில்லை. அந்த அறியாமையினாலேயே அவன் பூரணத்துவம் பெற்றவர்கள், மற்றும் அவர்களது செய்கைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்கிறான். இத்தகைய மகான்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் சந்திரனைப் போலவே நிலையற்ற தன்மை பெற்று வருந்துவார்கள் என்பதனையே விநாயகரின் மூஷிக வாகனப் பயணம் உணர்த்துகிறது.


விநாயகருக்கு நான்கு கரங்கள் உண்டு. இவை மனிதனின் உள் சக்திகளான 'மனஸ்' (மனது), 'புத்தி' (அறிவு), 'அஹங்காரம்' (அகந்தை) மற்றும் 'சித்' (பேரறிவு, மெஞ்ஞான சிந்தனை) என்பனவற்றைக் குறிக்கும். ஒரு கையில் கோடரியும், ஒரு கையில் கயிற்றையும், ஒரு கையில் வருத்த அரிசி உருண்டையையும் (மோதகம்) , நான்காவது கையினில் தாமரைப் பூவையும் கொண்டிருக்கிறார். கோடரி உலகப் பற்றினையும், ஆசைகளையும் அவற்றினால் விளையும் கோப, தாபங்களையும் வெட்டி விட வேண்டும் என்பதனை குறிக்கிறது. கயிறானது உலக பந்தங்களில் இருந்து ஒருவனை விடுவித்து நிலையான உண்மையான தன்னை உணர்தல் எனும் உணர்விற்கு கட்டிப் போடுவதை (பிணைப்பதை) உணர்த்துகிறது. மோதகம் தேடுதலுடைய ஒருவன் அடையப் போகும் நிலையான இன்பத்தைக் குறிக்கிறது. தாமரை பூ மனித பரிணாமவளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோளினைக் குறிக்கும்.


ஒவ்வொரு முறை விநாயகப் பெருமானை வணங்கும் போதும், அவரது உருவ அமைப்பு விளக்கும் இத்தகைய உயர்ந்த தத்துவங்களை மனதினிருத்திப் ப்ரார்த்திப்பது நம் அனைவருக்கும் கைவரப்பெற முழுமுதற் கடவுளான விநாயகனைப் வேண்டுகிறேன்.



Friday, January 25, 2008

குரு - சீடன் - லக்ஷணங்கள்

ஓர் உயர்ந்த குருவானவர் எப்படி இருக்க வேண்டும்; ஒரு சிறந்த சீடனானவன் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்கள் எவை என்பது பற்றி நமது வேதங்களிலும், புராணங்களிலும் எண்ணற்ற விளக்கங்கள் இருக்கின்றன.

குருவின் லக்ஷணங்களைப் பற்றி, வேதாந்த தேசிகர் 'ந்யாச விமசதி:' யில் ஒரு ஸ்லோகத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

"ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமனகம் ச்ரோத்ரியம் ப்ரஹ்ம்நிஷ்டம்
ஸத்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா ஸாதுவ்ருத்த்யா ஸமேதம்
தம்பாஸூயாதிமுக்தம் ஜிதவிஷயகணம் தீர்கபந்தும் தயாலும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேசிகம் பூஷ்ணுரீப்ஸேத் "

நல்ல சம்பிரதாயத்தில் சித்தமுடையவரும், திடமான மனதுடையவரும், பாபமற்றவரும், சாஸ்திரங்களை அறிந்தவரும், ப்ரஹ்மத்தில் ஒன்றியவரும், ஸத்வ குனம் அதிகமாகப் பெற்றுள்ளவரும், உண்மை பேசுபவரும், நல்ல ஆசாரத்துடன் இருப்பவரும், டம்பம், பொறாமை போன்றவைகளில்லாதவரும், வெளிப் பொருட்கள் விஷயமான பற்றை வென்றவரும், எப்போதும் உறவினராக விளங்குபவரும், தயையுடையவரும், தவறுகளைத் திருத்துபவரும், தனக்குச் சேர்ந்தவர்களுக்கும், பிறருக்கும் நன்மையை விரும்புபவருமான குருநாதரை வணங்குகிறேன் - என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு சீடனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களை "ந்யாச விம்சதி:" பின்வருமாறு கூறுகிறது.

"ஸத்புத்தி: ஸாதுஸேவீ ஸமுசிதசரித: தத்த்வபோதாபிலாக்ஷீ
சுச்ரூஷூ: த்யக்தமான: ப்ரணிபதனபர: ப்ரச்னகாலப்ரதீக்ஷ:
சாந்தோ தாந்தோsனஸூய: சரணமுபகத: சாஸ்த்ரவிச்வாஸசாலீ
சிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் க்ருதவிதபிமதம் தத்த்வத: சிக்ஷணீய: "

நல்ல மனதுள்ளவன், மஹான்களுக்குச் சேவை செய்பவன், சரியான நடத்தை உள்ளவன், தத்துவத்தை அறிய ஆர்வமுள்லவன், குருவின் சேவையையே கருத்தில் கொண்டிருப்பவன், அகந்தையற்றவன், குருவை நமஸ்கரிப்பதற்கு ஆர்வமுடனிருப்பவன், கேள்விகளை வினவத் தக்க தருணத்தை எதிர் நோக்குபவன், மனவடக்கம் பொருந்தியவன், புலனடக்கம் வாய்க்கப் பெற்றவன், பகைமையற்றவன், குருவிடம் சரணமடைந்தவன், சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவன் - தகுந்த பரீக்ஷையில் தேறிய நன்றியுள்ள இத்தகைய சீடனுக்கு விருப்பமாயுள்ளதான தத்துவம் கற்றுத்தரப்பட வேண்டும்.

இன்றைய கால குரு, சிஷ்யர்களுக்கும் இந்த லக்ஷணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதி சங்கரர் மட்டுமே கோவிந்தபகவத் பாதரிடம் சீடனாக இருந்த போது இங்கு கூறப்பெற்ற சகல லக்ஷணங்களையும் பெற்றிருந்தார். அவரே லோக குருவாக உயர்ந்த போது, குருவிற்காக கூறப்பெற்ற அனைத்து லக்ஷணங்களையுமே பெற்றிருந்தார். அவர்தம் தாழ் பணிந்து பாரத புண்ணிய பூமியின் மக்களாகிய நாமனைவரும் நலம் பெறுவோமாக!

Wednesday, January 23, 2008

ஆன்மா - ஓர் எளிய அலசல்

பகவத்பாதாள் (ஆதி சங்கரர்) ஆத்மாவைப் பற்றிய அறிவை உண்டாக்குவதற்கு மிகவும் தெளிவாக உபதேசம் கொடுத்துள்ளார். குரு சிஷ்யனுக்கு இடையிலான சம்பாஷணை மூலம் உயர்ந்த தத்துவங்களை எளிதாக விளங்கும்படி விவரித்துள்ளார். ஏகஸ்லோகத்தில்:

"கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்
ஸ்யாதேவம் ரவிதீபதர்சனவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே
சக்ஷுஸ்தஸ்ய நிமீலனாதிஸமயே கிம் தீர்தியோ தர்சனே
கிம் தத்ராஹமதோ பவான் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ"

குரு: "கிம் ஜ்யோதிஸ்தவ" - எந்தப் பிரகாசம் மூலமாக நீ எல்லாப் பொருட்களையும் பார்க்கின்றாய்?

சீடன்: "பானுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்" - பகலில் சூரிய வெளிச்சமிருக்கின்றது. அதன் மூலமாக எல்லாப் பொருட்களையும் நாம் தெரிந்து கொள்கின்றோம். இரவு ஆகிவிட்டால் விளக்கு, சந்திரன் ஆகிய இவற்றின் உதவியால் நமக்குப் பொருட்களைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது.

குரு: "ஸ்யாதேவம் ரவிதீபதர்சனவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே" - சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் எவ்வாறு அறிந்து கொள்கிறாய்? இவற்றைக் காட்டுவதற்கு எந்த ஒளி இருக்கிறது?

சீடன்: "சக்ஷுஸ்தஸ்ய " - கண் மூலமாக. இவைகளைப் பார்க்க வேறொரு ஒளி தேவையில்லை. சூரியனைப் பார்க்க வேறொரு சூரியனோ, சந்திரனைப் பார்க்க வேறொரு பிரகாசமோ தேவையில்லை. பார்க்கத் தேவையானது கண் ஒன்று தான்.

குரு:"நிமீலனாதிஸமயே கிம் தீர்தியோ தர்சனே" - கண்களிரண்டும் மூடிக் கொண்டிருந்தாலும், பலவிதமான காட்சிகளும், அறிவுரைகளும் தெரியத்தானே செய்கின்றன? அவை எந்த ஒளியின் மூலமாக ஏற்படுகிறது?

சீடன்: "தீ:" - அப்போது புத்தியின் மூலமாகத்தான் ஞானம் ஏற்படுகிறது.

குரு: சரி! புத்தியின் மூலமாகத்தான் பலவிதமான பொருட்களை அறிந்து கொள்கிறோம் என்று ஒப்புக் கொள்ளலாம். புத்தி இருக்கிறதென்று தெரிகிறதா?
"கிம் தத்ர" - அதை எதன் மூலம் தெரிந்து கொண்டாய்?

சீடன்: "அஹம்" - நானேதான்.

குரு: "அத: பவான் பரமகம் ஜ்யோதி:" - ஆதலால் எல்லாவற்றிற்கும் பரமப்பிரகாசமானவன் நீதான். அதுதான் ஆத்மா. அந்த ஆத்மாவே கண்ணையும் பார்க்கிறது. சூரிய சந்திரர்களையும் பார்க்கிறது. எல்லாவற்றையும் பார்பது அதுவே. மூலப்பிரகாசம் அதுவே. உன்னுடைய சங்கல்பத்தினால் தான் சந்திரன், தீபம், இந்திரியம், புத்தி இவையனைத்தும் பிரகாசிக்க முடிகிறது. உன்னைக் காட்டிலும் உயர்ந்த பிரகாசம் எதுவுமில்லை.

இவ்விதம் பல எளிய ஸ்லோகங்கள் மூலம் ஆத்ம தத்துவத்தை விளக்கியுள்ளார் ஆதி சங்கரர்.